2021 சட்டமன்ற தேர்தல் - ஒரு மீள்பார்வை
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 6, 2021 அன்று ஒரே கட்டமாக நடந்தது. இதனுடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்தது. மே 2, 2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
தமிழக முதலமைச்சர்களாக இருந்த மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் இது. இதில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் நடத்தப்பட்டது. 72.81 சதவிகிதம் வாக்குப் பதிவானது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறின. அது போலவே திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. 173 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக மட்டும் 65 இடங்களை பெற்றது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 2021 பிப்ரவரி 11ம் தேதி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கியது. மார்ச் 19ல் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது. 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடந்தது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாக இருந்தது. ஏப்ரல் 4, 2021 மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அதிமுக கூட்டணியில் அதிமுக 179 இடங்களிலும், பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாக 6 இடங்களிலும், பெருந்தலைவர் மக்கள் மக்கள் கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன.
தி.மு.க கூட்டணியில் திமுக 173 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக தலா 6 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி தலா 2 இடங்களில் போட்டியிட்டன. இது தவிர அனைத்திந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கழகம், ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
அ.ம.மு.க, தே.மு.தி.க, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் தனியாகக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி தனியாக 234 தொகுதியிலும் போட்டியிட்டது.