வைல்ட்லைஃப் போட்டோகிராஃபராக மாறிய ‘அந்நியன்' சதா… சினிமா நடிகை க்ளிக்ஸ் காதலியாக மாறியது எப்படி?
நடிகைகள் நடிப்பை விட்டதும் தொழிலதிபரை மணந்து குடும்பத்தலைவியாக மாறுவதுதான் வாடிக்கை. ஆனால், காடுகளுக்குள் நுழைந்து புலிகளைப் படம்பிடிக்கும் வைல்ட்லைஃப் போட்டோகிராஃபராக மாறி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.
‘ஜெயம்’ என்கிற படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக நுழைந்தவர் சதா. 2000-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த சதா, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘அந்நியன்’ படத்தில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் ‘திருப்பதி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த சதாவுக்கு 2018-ம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்'தான் தமிழில் கடைசிப்படம். மற்ற மொழிகளில் கவனம் செலுத்தியவர் அதன்பிறகு சினிமா பக்கம் வரவேயில்லை. காரணம் வைல்ட்லைஃப் போட்டோகிராபராக மாறிவிட்டார் சதா.
மகாராஷ்டிராவில் உள்ள காடுகளில் புலிகளைப் படம்பிடிக்கும் மிகவும் முக்கியமான போட்டோகிராஃபராக மாறியிருக்கிறார் சதா. இவர் படம்பிடித்த புலிகளின் புகைப்படங்கள் சர்வதேச வைல்ட்லைஃப் இதழ்களில் இடம்பிடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
‘’உங்கள் கம்ஃபர்ட் ஸோனில் இருந்து முதல்முறையாக வெளியே வரும்போது ஒருவிதமான பதட்டம் சூழ்ந்துகொள்ளும். இது திறமையில்லாததால் வரும் பதட்டம் அல்ல… புதிய உலகத்தோடு அறிமுகம் இல்லாததால் வரும் பயம். இந்த பயத்தை உடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே சாத்தியப்படும். உங்கள் கம்ஃபர்ட் ஸோனில் இருந்து வெளியேறுங்கள்'’ என தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை சிறுகுறிப்புடன் சொல்கிறார் சதா.