விக்ரம் - சூர்யா - பாலா ஈகோ யுத்தத்தில் வெல்லப்போவது யார்… ‘தங்கலான்' உடன் மோதத்துடிக்கும் ‘வணங்கான்'!
விக்ரமின் பிதாமகனாக தமிழ்திரையுலகுக்குள் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் இயக்குநர் பாலா. அதுவரை துணை நடிகராக, இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்த விக்ரமுக்கு சீயான் விக்ரம் எனப்புகழ் உருவாகி தமிழ் சினிமாவின் தனித்த ஸ்டாராக ஒளிரக் காரணமாக அமைந்தது பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படம். இந்தப்படத்துக்குப்பிறகு மீண்டும் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் அவருக்கு தேசிய விருதுகளை வாங்கித்தந்தது.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களால் பாலாவுடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தார் விக்ரம். இந்தச்சூழலில் விக்ரமின் மகன் துருவ் சினிமாவுக்குள் ஹீரோவாக விரும்ப, தனக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தித்தந்த பாலா மூலம் தன் மகன் அறிமுகமானால் அவரின் வாழ்க்கை பிரகாசமாக அமையும் என நினைத்தார் விக்ரம்.
மீண்டும் பாலாவிடம் போய் தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என நிற்க, தெலுங்குப்படமான அர்ஜுன் ரெட்டியை தமிழில் ரீமேக் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அர்ஜுன் ரெட்டியை எடுக்காமல் பாலா அவருடைய ஸ்டைலில் வேறுபடமாக அதை எடுத்துமுடிக்க, படத்தைப்பார்த்த விக்ரம் உள்பட எல்லோருக்கும் அதிர்ச்சி. எடுத்துமுடித்த படத்தை அப்படியே குப்பையில் போட்டுவிட்டு, ‘அர்ஜுன் ரெட்டி’யின் துணை இயக்குநரை அழைத்துவந்து படத்தை முழுவதுமாக ரீஷூட் செய்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் வெளியிட்டார் விக்ரம். இது பாலாவுக்கு மிகப்பெரிய அவமானமாக மாற, விக்ரமுக்கும், அவருக்கும் இடையேயான ஈகோ யுத்தம் அடுத்தக்கட்டத்துக்குப்போனது.
இதற்கிடையே தான் வாழ்வளித்த இன்னொரு ஹீரோ என பாலா நம்பும் சூர்யாவை வைத்து ‘வணங்கான்' படத்தை ஆரம்பித்தார் பாலா. ஆனால், சினிமா உலகில் பெரிதாக வளர்ந்து நிற்கும் சூர்யாவை ஷூட்டிங் செட்டில் அவமானப்படுத்துவது, தேவையில்லாத காட்சிகள் எடுத்து டார்ச்சர் செய்வது என மீண்டும் பழைய பாலாவாக மாறி பிரச்சனை செய்ய சூர்யா படத்தில் இருந்து விலகினார். சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்' படத்தை இயக்கி முடித்தார் பாலா.
துரோகிகள் என நினைக்கும் விக்ரம், சூர்யா இருவருக்குமே ‘வணங்கான்' படம் மூலம் பதில் சொல்லத்துடிக்கிறார் பாலா. அதனால் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘தங்கலான்' படத்தை ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், தன்னுடைய ‘வணங்கான்' படத்தையும் அதே நாளில் ரிலீஸ் செய்வது என முடிவெடுத்திருக்கிறார். ‘தங்கலான்' படத்தை ‘வணங்கான்' தோற்கடிக்க வேண்டும், ‘வணங்கான்’ வெற்றியைப் பார்த்து நாம் நடிக்காமல் போய்விட்டோமோ என சூர்யா வருத்தப்படவேண்டும் என்பதுதான் பாலாவின் எண்ணமாம். நடக்கப்போவது என்னவோ?!