'துப்பாக்கி - 2' எடுக்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்... சிவகார்த்திகேயன் படத்தில் விக்ராந்த், வித்யூத் ஏன்?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்தியனின் 23-வது படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது.
ஏற்கெனவே முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்துவருகிறது. இதில்தான் விக்ராந்த் இணைந்திருக்கிறார். நடிகர் விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்த விக்ராந்தை சிவகார்த்திகேயன் படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் முருகதாஸ்.
விக்ராந்த்தின் போஸ்டரை நேற்றிரவு வெளியிட்டிருக்கிறது படக்குழு. இதில் கையில் துப்பாக்கியோடு தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளப்போகும் போஸில் நிற்கிறார் விக்ராந்த். இது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் கொடுத்த போஸ் போலவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 'துப்பாக்கி' படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வாலையும் இதில் வில்லனாக நடிக்க அழைத்துவந்திருக்கிறார் முருகதாஸ். இதனால் முருகதாஸ் ஒருவேளை சிவகார்த்திகேயனை வைத்து ‘துப்பாக்கி -2’ எடுக்கிறாரோ என்கிற பேச்சுகள் பரவ ஆரம்பித்திருக்கிறது. படத்தின் டைட்டிலையும் இன்னும் வெளியிடாமல் வைத்திருப்பதிலேயே எதோ ரகசியம் இருக்கிறது என்கிறார்கள் சிவகார்த்திகேயன் - முருகதாஸுக்கு நெருக்கமானவர்கள்.
ருக்மினி வசந்த் எனும் கன்னட நடிகை இந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். அதேப்போல் ‘அய்யப்பனும் கோஷியும்' பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.