நம்முடைய உடலின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது மூளைதான். எனவே தான் வயதாகும் போது அதன் அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. வயது அதிகரிக்கும் போது அதன் செயல்பாடு குறைவது இயல்பானதுதான். ஆனால் இது தவிர்க்க முடியாதது இல்லை. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதை இளமையாக வைத்திருக்க உதவும் வழிகளைப் பற்றி இங்கே காண்போம்.
எப்போதும் எதையாவது கற்க வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். மூளை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கும் போது மூளை தூண்டப்பட்டு, மூளை செல்கள் புதிய இணைப்பை ஏற்படுத்துகின்றன. மூளையில் புதிய செல்கள் உருவாக்கத்திற்கு புதிய விஷயங்களை கற்றல் உதவுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் மூளை செல்கள் இழப்பு எதிரான செயல்படு மூளையில் நடக்கிறது.
உடற்பயிற்சி செய்வது உடலை மட்டுமல்ல... மூளை செல்களையும் உறுதியாக்குகிறது. எனவே, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மூளையின் எல்லா பகுதிக்கும் ரத்தம் செல்கிறது. விரைவாக ரத்தம் சென்று சேர நுண்ணிய ரத்தக் குழாய்களும் உருவாகிறது. இது புதிய நரம்பு செல்கள் உருவாக்கத்துக்கு துணை செய்கிறது. இதன் காரணமாக மூளை மிகவும் ஆற்றலுடன் செயல்படும். இதனுடன் செஸ், சுடோக்கு, தியானம் போன்ற மூளைக்கான பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
வயதாகும் போது உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்படும். இது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். சிகரெட், மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வெண்டும். சரியானதைச் சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். அதே போல் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய உணவுப் பழக்கம் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எளிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட வால்நட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளையின் ஆரோக்கியத்துக்குத் தூக்கமும் மிகமிக அவசியம். நாம் மிகக் குறைவாக தூங்கினால், பகலில் நாம் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த முடியாமல் போகும். மேலும் எதிர்காலத்தில் அதை நினைவில் கொள்வதில் சிக்கல் ஏற்படும். மூளையின் உயிரணுக்களில் இருந்து கழிவுப் பொருட்களை அகற்றுவதை தூக்கம் ஊக்குவிக்கிறது. இந்த செயல்பாடானது இது மூளையின் திறனை மேம்படுத்தி ஆரோக்கியமாக இருக்கச் செய்யும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-9 மணி நேர தூக்கம் அவசியம்.
அதீத மன அழுத்தம், தூக்கமின்மை, உளவியல் பிரச்னை உள்ளவர்களுக்கு மூளை செயல்திறன் குறையும். எனவே, இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை சரி செய்ய வேண்டும். மற்றவர்களுடன் பேசி பழகி உங்களை சமூக மயமாக்கிக்கொள்ள வேண்டும். இது டிமென்ஷியா எனப்படும் மறதி நோயைத் தடுக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி வாழ்நாளைக் கூட்டும்.