ஏன் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் தெரியுமா?
காலை உணவை 11 மணிக்கு சாப்பிடுவது, மதிய உணவை 3 மணிக்கும் இரவு உணவை நள்ளிரவிலும் சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஊட்டச்சத்து என்று வரும் போது என்ன சாப்பிட வேண்டும் என்று பார்த்து பார்த்து சாப்பிடுவதைப் போன்று எப்போது சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து அதை பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.
நம்முடைய உடலுக்குள்ளேயே ஒரு உயிரி கடிகாரம் உள்ளது. இதை circadian rhythm என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதன் படி நம்முடைய காலை உணவை காலை 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். மதிய உணவை 12-1க்குள்ளும், இரவு உணவை 7 மணிக்குள்ளாகவும் சாப்பிட வேண்டும். இப்படித்தான் நம்முடைய உடல் உணவை எடுத்துக்கொள்ளும் நேரம் பழகியுள்ளது.
இரவு சாப்பிட்டுவிட்டு காலையில் கண் வழிக்கிறோம். இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்லவே குறைந்தது 2-3 மணி நேரம் ஆகிவிடுகிறது. அதன் பிறகு 8 மணி நேர ஆழ்ந்த தூக்கத்துக்குப் பிறகு கண் வழிக்கிறோம். இதனால் இரண்டு உணவுக்குமான இடைவெளி தோராயமாக 10 - 12 மணி நேரமாக மாறிவிடுகிறது. எனவே, காலையில் எழுந்ததுமே 7 - 8 மணிக்குள்ளாக சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க துணை செய்கிறது.
காலையில் உணவைத் தவிர்ப்பது நல்லதில்லை. இதனால் அடுத்த வேளை உணவை எடுக்கும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் சூழல் ஏற்படும். அதிகப்படியான கலோரி கிடைப்பது உடலில் கொழுப்பு படிய காரணமாகிவிடுகிறது.
காலை உணவுக்குப் பிறகு 10 - 11 மணி அளவில் சிறிய அளவில் ஆப்பிள், நட்ஸ் என எடுத்துக்கொள்ளலாம். மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நம்முடைய உடலில் மெட்டபாலிசம் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் தாராளமான அளவில் உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அதுவும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து என கலவையான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி எடுத்துக்கொள்வது மதியம் முதல் மாலை வரை உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க உதவும்.
இரவு உணவு என்பது அன்றைய நாளின் இறுதி உணவு... இரவு தூங்கச் செல்வத்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு மிக்க, செரிமானத்துக்கு கடினமான உணவை எடுக்கக் கூடாது. அதிக உணவும் வேண்டாம். ஏனெனில் நாம் தூங்கும்போது மெட்டபாலிசம் மிகவும் மெதுவாக நடைபெறும். எனவே, எளிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த 24 மணி நேர உயிரி கடிகாரத்தை சரியான பின்பற்றி வந்தால் உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்!