ஹத்ராஸில் 123 பேர் இறந்த சம்பவம்... ஒருவரைக் கூட கைது செய்யாத உ.பி போலீஸ்!
ஹத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கூட உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்யவில்லை. இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சாமியார் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலோ பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 123 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க பெண்கள் முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உ.பி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய, அதிக அளவில் மக்கள் கூட்டத்தைக் கூடவிட்டு, முன்னேற்பாடுகளைச் சரியான முறையில் செய்யாத அந்த சாமியார், மற்றும் அவரது அமைப்பு மீது பலரும் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். ஆனாலும் அந்த சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதற்கு பதில், சாமியாரின் உதவியாளர் தேவ்பிரகாஷ் மதுகர் மீது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்று குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் "சாமியார் ஏன் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை?" என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு யோகியோ, "முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் அனைவரும் விசாரணைக்குள் கொண்டுவரப்படுவார்கள்" என்று பொதுவாக கூறிச் சென்றார்.
இது தொடர்பாக இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரும் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் விசாரணை அறிக்கை வரட்டும்... இந்த சம்பவம் தொடர்பாக யாரும் தப்பிக்க முடியாது" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று முன்னாள் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் அறிக்கையை அளிக்கும். கண்கூடாக இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும், 2 மாதம் கழித்து விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் துணை முதலமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
சாமியார் போலோ நாத் எனப்படும் நாராயண் சாஹர் ஹரியின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வழக்கு தொடர்பாக அரசுக்கும் காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க போலோ நாத் தயாராக உள்ளார். சில சமூக விரோதிகளின் சதித் திட்டம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.