மெக்கா ஹஜ் பயணிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 1301 ஆக உயர்வு!
சௌதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்காக லட்சக் கணக்கான மக்கள் மெக்காவுக்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு மெக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாகப் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1301 பேர் உயிரிழந்துள்ளதாக சௌதி அரேபியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய சௌதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹத் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜலாஜெல் கூறுகையில், "உயிரிழந்த 1301 பேரில் 83 சதவிகிதம் பேர் உரிய அனுமதியின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் ஆவர். இவர்கள் நீண்ட தூரம் நடந்து வந்துள்ளனர். இந்த சூழலில் அதீத வெப்பம் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 95 ஹஜ் பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் ரியாத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி வந்தவர்கள் பலரும் உயிரிழந்திருப்பதால் இறந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே, அவர்களை மெக்காவிலேயே அடக்கம் செய்துவிட்டோம். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் எகிப்தை சார்ந்தவர்கள். அவர்களில் 31 பேர் உரிய அனுமதியின்றி சென்றதால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்திலிருந்து நடந்தே உரிய அனுமதியின்றி பலரும் மெக்காவுக்கு வருகின்றனர். அனுமதியுடன் முன் ஏற்பாட்டுடன் வரும் பயணிகளுக்கு வெப்பத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஓய்வெடுக்க ஹோட்டல்கள் உள்ளது. ஆனால், நீண்ட தூரம் அனுமதியின்றி நடந்து வருபவர்களுக்கு வெப்பத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு - வசதி இல்லாமல் போய்விடுகிறது.
எகிப்தில் உள்ள பல டிராவல் ஏஜென்சிகள் எகிப்திலிருந்து சௌதி அரேபியாவின் இதர பகுதிகளுக்கு சுற்றுலா விசாவில் பயணிகளை அனுப்பிவிடுகின்றன. மெக்கா செல்வதற்கான அனுமதி இன்றி சௌதியின் வேறு பகுதிக்கு வரும் மக்கள், அங்கிருந்து நடந்து மெக்காவுக்கு வருகின்றனர். இதுவே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று எகிப்து அதிகாரிகள் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளன.சௌதி அரேபியா சட்டப்படி மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தனி விசா வழங்கப்படும். அந்த விசா இருந்தால் மட்டுமே மெக்கா நகருக்கு செல்ல முடியும்.
இந்த வெப்ப பாதிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து சென்றவர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்காவில் தற்போது 46 முதல் 49 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாகப் பயணிகள் பலரும் நிலைகுலைந்து உயிரிழந்துள்ளனர்.