கள்ளக்குறிச்சி பாக்கெட் சாராய பயங்கரம் : 26 பேர் பலி… மரணங்கள் தொடர்வதால் அச்சத்தில் மக்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த 26 பேர் நேற்று காலை வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் பிரச்சனைகளால் அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாக தகவல் வெளியானது.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 4 பேர் அடுத்தடுத்து இறக்க, கள்ளச்சாராயம் அருந்தியதுதான் காரணம் என்கிற தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்தார் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார். ஆனால், நேரம் கூடக்கூட 75-க்கும் மேற்பட்ட ஆண்கள் இதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலி எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. தமிழக அரசு சார்பில் கள்ளச்சாரயம்தான் காரணம் என்கிற ஒப்புதல் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது.
இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி 26 பேர் உயிரிழந்திருப்பதோடு, 70-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.