இந்த ஆண்டு 98 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுக்க நிலவும் பொருளாதார மந்தநிலை, போர் அபாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய மென்பொருள் துறையிலும் எதிரொலித்துள்ளது.
மென்பொருள் துறையில் பணி நீக்கம், பணிச் சுமை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர்களாகவே வேலையை விட்டுப் போக வைப்பது என்று பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு கிட்டத்தட்ட 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக layoffs.fyi என்ற இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா உள்ளிட்ட காரணங்களைக் காட்டி வருவாய் இழப்பு என்று 2022ல் இப்படி வேலையை விட்டு நீக்குவது தொடங்கியது. அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆயிரக் கணக்கானோரை வேலையில் இருந்து அனுப்பியது. 2023ல் இதன் அளவு அதிகரித்தது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் வேலையை இழந்தனர். இந்த ஆண்டில் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 98 ஆயிரம் பேர் பணி நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டும் பணி நீக்கம் செய்யப்படும் அளவு குறையவில்லை என்பது தெரிகிறது. வரும் மாதங்களில் பணி நீக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
அதிலும் மன அழுத்தம், பணிச் சுமையை அதிகரித்து அவர்களாகவே வேலையை விட்டு விலகும் சூழலை உருவாக்கும் சைலண்ட் லேஆஃப் என்ற வழிமுறையை நிறுவனங்கள் பயன்படுத்துவதாக அந்த இணையதளம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்களாக மொத்தமாகப் பணி நீக்கம் செய்தன என்ற உண்மை மக்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது.
ஒரு நிறுவனத்தில் ஒருவர் நிம்மதியாக வேலை செய்து கொண்டிருப்பார். அவருக்கு திடீரென்று எச்.ஆர்-இடமிருந்து உங்கள் டீமில் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. எனவே, நமது நிறுவனத்திலேயே வேறு ஏதாவது டீனுக்கு மாற முயற்சி செய்யுங்கள். 30 நாட்களுக்குள் மாறிவிட வேண்டும். இதை செய்ய முடியாத சூழலில் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். நிறுவனத்தின் கொள்கை காரணமாக வேறு டீமுக்கும் இவர்களால் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. கடைசியில் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு பதில் தாங்களாகவே பணியிலிருந்து விலகிவிடுகின்றனர் என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இதே போன்று ஐந்து பேர் செய்த வேலையை ஒருவரையே செய்ய வற்புறுத்துவது, அவர்களுக்கு சம்பந்தமில்லாத பணியை அவர்களுக்கு கொடுத்து, காலக்கெடுவுக்குள் முடிக்க வற்புறுத்துவது, சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் செய்வது போன்ற மன அழுத்தம் தரக் கூடிய காரியங்களைச் செய்கிறார்கள். இதனால் பலரும் வேலையை விட்டு விலகுவதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.