அதிமுக எதிரி இல்லை... அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!
தி.மு.க - அ.தி.மு.க எதிரி இல்லை என்று விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க - பா.ம.க இடையே கடும் போட்டி உள்ளது. அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதால் அதிமுக-வினர் ஓட்டு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க ரகசிய கூட்டணி என்றும் அதனால் தான் அ.தி.மு.க தேர்தலை புறக்கணித்து ரகசியமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "இங்கு அதிமுக நிற்கவில்லை. ஏன் நிற்கவில்லை என்பதை எல்லாம் நாங்கள் பிற்காலத்திலே சொல்கிறோம். அவர்கள் அல்ல இன்றைக்கு நமக்கு எதிரி. இந்த தேர்தலை பொறுத்த அளவுக்கு மோடி தலைமையில் இருக்கின்ற கூட்டணி தான் நமக்கு எதிரி. பாரதிய ஜனதா என்கிற ஒரு பாசிச சக்தி. தமிழ்நாட்டில் புல், பூண்டு கூட விளையலாம், ஆனால் அவர்கள் விளைந்துவிட்டால் சமுதாயமே செத்துவிடும்.
அந்த பாரதி ஜனதா கட்சி கூட்டணியின் வேட்பாளராகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் நிற்கிறார். மற்றொறு வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இவர்கள் தான் இன்றைக்கு நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள்.
அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில் நம்முடைய திண்னைப் பிரசாரம் என்பது நம்முடைய ஆட்சியைப் பற்றியும் நம்மை எதிர்த்து நிற்பவர்களின் தரத்தைப் பற்றி பேசுவதாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இருந்து என்னிடம் பேட்டி கேட்டார்கள். அப்போது திருவண்ணாமலை ஆன்மிக பூமியாயிற்றே... அண்ணாமலை ஆயிற்றே என்றார்கள். "அண்ணாமலை என்னய்யா... நான் திருவண்ணாமலைக்காரன்... நான் என்னய்யா அண்ணாமலையை பொருட்படுத்தப் போகிறேன்" என்றேன்.
திருவண்ணாமலை ஆன்மிக மண் ஆயிற்றே என்றார்கள். திருவண்ணாமலை ஆன்மிக மண்ணாக இருக்கலாம். காலையில அண்ணாமலையார் கோவிலில் கும்பிடுவார்கள்... மாலையில் பெரியாரைப் பற்றி பேசுகிற மண் தான் திருவண்ணாமலை மண். ஆன்மிகத்தையும் திராவிடத்தை பிரித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது" என்று பேசினார்.