தொடர்ந்து துரத்திய விரோதிகள்.... பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை!
சென்னை பெரம்பூரில் வசித்துவந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வீட்டின் அருகிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது வடசென்னையில் பதட்டமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
இன்று மாலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு வெளியே இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆர்ம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொலை செய்திருக்கிறது. உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
யார் இந்த ஆர்ம்ஸ்ட்ராங்?!
சென்னை பெரம்பூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு வயது 52. சட்டம் படித்தவரான ஆர்ம்ஸ்ட்ராங் வடசென்னையின் மிக முக்கியமான தலித் தலைவராக அறியப்பட்டவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2008-ம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நடந்த சாதிய மோதலில்தான் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பெயர் முதன்முதலில் தமிழகம் முழுவதும் பிரபலமானது.
சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் மாணவர்கள் முறையிட, தலித் மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ம்ஸ்ட்ராங் களமிறங்க, அது இரு தரப்பு மோதலாக மாறியது.
2011 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவர் ஆர்ம்ஸ்ட்ராங். சென்னை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றியிருக்கிறார்.