சிவகாசியில் சாதி ஆணவக்கொலை : 26 வயது கார்த்திக்கை மனைவியின் அண்ணன்களே வெட்டிக்கொன்ற கொடூரம்!
சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி. மெக்கானிக் கடையில் வேலைபார்த்து வந்த கார்த்திக்கும், இதே பகுதியைச் சேர்ந்த நந்தினும் 8 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். 26 வயதான கார்த்திக் 22 வயது நந்தினி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டுத் தரப்பில் இந்தக் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு வர, நந்தினியும், கார்த்திக்கும் 8 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் தன் மனைவி வேலைபார்த்துவந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த கார்த்திக் பாண்டியை மூன்று பேர் வழிமறித்து நடுரோட்டில் வெட்டிக்கொன்றுள்ளனர்.
கொலையாளிகளை போலீஸ் பிடிக்க அதில் இருவர் நந்தினியின் சொந்த அண்ணன்கள் எனத்தெரியவந்திருக்கிறது. பாலமுருகன், தனபாலன் இருவரும் சிவா என்கிற உறவுக்காரனோடு சேர்ந்து தங்கையின் கணவனையே கொடூரமாக வெட்டிக்கொன்றிருக்கிறார்கள்.