ஆம்ஸ்ட்ராங் வெட்டப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு... ஆட்கள் சூழ்ந்திருந்தபோதே நடந்த படுகொலை!
கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலைசெய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வீடியோவை சென்னை மாநகர காவல்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது. இன்று அதிகாலை கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் இந்த சிசிடிவி காட்சியை இப்போது வெளியிட்டிருக்கிறது காவல்துறை.
கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக்குற்றவாளிகள் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் அதை உறுதிப்படுத்தும்விதமாக இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கிறது காவல்துறை.
கட்டட வேலைகள் நடந்துகொண்டிருக்க, கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக்க, எல்லோரது கண்முன்பாகவும் இந்தப்படுகொலை நடந்திருப்பது இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்திருக்கிறது.
உணவு டெலிவரி ஆட்கள் போல வந்தவர்கள் வெட்ட, அதற்கு முன்பாக பொன்னை பாலுவும், கூட்டாளியும் தனியாக பைக்கில் செல்லும் காட்சிகளும் இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. கொலைக்கு முன்பாக ஆங்காங்கே நின்று திட்டமிடுவதும், பின்னர் ஒன்றுகூடி சூழ்ந்து வெட்டுவதும் இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. திமுகவுடன் சம்பந்தப்படுத்தப்படும் வழக்கறிஞர் அருள் இந்த சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார்.