இன்றும் தொடரும் மைக்ரோசாஃப்ட் பிரச்னை... ரஷ்யா, சீனாவில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லை!
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்து. அலுவலகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக இருக்கின்றனர்.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ சாஃப்ட்வேரை அப்டேட் செய்வது வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதனால் மைக்ரோசாஃப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது.
இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் அஸூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் சாப்ட்வேரில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினிசெயலிழந்துள்ளது’ என்று காட்டியது. இந்த பிரச்னை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில், ''தொழில்நுட்ப பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம். மைக்ரோசாப்ட் 365 சேவையை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவன தலைமைசெயல் அதிகாரி ஜார்ஜ் கூறும்போது, “சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதற்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண சற்று அவகாசம் தேவைப்படும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சர்வதேச சைபர் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறும்போது, ''கடந்த 2017 மே மாதம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சாஃப்ட்வேர் மீது ‘வான்னாகிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள், மடிக்கணினிகள் செயலிழந்து தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டன. 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த முறை பாதிப்பு அதிகமாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண எத்தனை நாட்கள் ஆகும் என்பதை உறுதியாக கூற முடியாது'' என்கின்றனர்.
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பிரச்னையால் உலகமே முடங்கியபோதிலும், ரஷ்யா, சீனாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், விஸ்தாரா, ஏர் இண்டியா நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இண்டிகோவின் 192 விமான சேவைகள் உட்பட நாடு முழுவதும் நேற்று 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதியடைந்தனர்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மைக்ரோசாஃப்ட் உடன் தொடர்பில் உள்ளோம். பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது. கோளாறு விரைவில் சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.