டொனால்ட் டிரம்ப்புக்கு 375 கோடி தேர்தல் நிதி தருகிறாரா எலான் மஸ்க்… உண்மை என்ன?
டொனால்ட் டிரம்ப்பின் ஜனாதிபதி பிரசாரத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டிக்கு(PAC) மாதந்தோறும் 45 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 375 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ இதைப் பொய் செய்தியென எலான் மஸ்க்கே தனது எக்ஸ் தளத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். டிரம்ப் மீதான துப்பாக்கி சூட்டுக்குப்பிறகு டொனால்ட் டிரம்ப்பை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ள மஸ்க் நன்கொடை செய்தியை மறுத்திருக்கிறார்.
மஸ்க் தேர்தல் நிதி தரவில்லை என்றாலும் டிரம்புக்கு வெளிப்படையாக மஸ்க் ஆதரவு தருவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஒரு எலக்ட்ரிக் வாகன மாநாட்டை ஜோ பைடன் அரசு நடத்தியது. இதில் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு தரப்படவில்லை. டெஸ்லா எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. சீனாவில் கார் உற்பத்தி ஆலையை நிறுவி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். இருப்பினும் தனது நிறுவனமான டெஸ்லாவுக்கு அழைப்பு விடாததற்கு பகிரங்கமாக அதிபர் ஜோ பைடனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். இருந்தாலும் அதை ஜோ பைடன் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜோ பைடன் மீது எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்தார்.
இதுதான் டிரம்ப் பக்கம் எலான் மஸ்க் சாயக் காரணம் என்கிறார்கள்!