''சவுக்கு சங்கர் டிப்ரஷனில் பேசியிருக்கலாம்'' - உச்சநீதிமன்ற நீதிபதி நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்!
சவுக்கு என்கிற பிளாகில் எழுத ஆரம்பித்து பின்னர் யூ-ட்யூப் தளங்களில் பரபரப்பு பேட்டிகள் மூலம் பிரபலமானவர் சவுக்கு சங்கர். ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் பியூனாக வேலை பார்த்த சவுக்கு சங்கர் முன்னாள் போலீஸ் அதிகாரி உபத்யாயாவின் போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கு மூலம் முதன்முதலாக சிறையில் அடைக்கப்பட்டு பிரபலமானார்.
சவுக்கு என்கிற தன்னுடைய பிளாக் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தின் பெயரையே அடைமொழியாக வைத்துக்கொண்ட சங்கர், தொடர்ந்து தனது பேட்டிகளில் ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் எனப் பலரையும் விமர்சித்துவந்தார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பெண் காவலர்களை இழிவாகப் பேசிய வழக்கில் கைது செய்தது தமிழக போலீஸ். பின்னர் சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு ஓர் ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் அம்மா கமலா தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிபதி சுதன்ஸ்து துலியா மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கரை குண்டர் சட்டதில் காவலில் வைத்திருப்பது குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக அரசு வழக்கறிஞரிடம் முன்வைத்தது. ''சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கரின் சுதந்திரத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டதுபோலத் தெரிகிறது'' என சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும் தங்களது அதிருப்தியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்தினார்கள்.
‘’இரண்டு வழக்குகளை மட்டும் சங்கர் மீது குறிப்பிடுகிறீர்கள். சங்கர் மீது புகார் அளித்த நிருபரும் அவரது மாநிலத்தில் இல்லாமல் டெல்லியில் இருந்துகொண்டு புகார் அளித்திருக்கிறார். அவர் குறிப்பிடும் வழக்கு பற்றிய விவரங்கள் எங்கள் நினைவிலேயே இல்லை. அவர் ஏன் இன்னும் தடுப்புக்காவலில் இருக்கவேண்டும், அவரால் தேசிய பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் இருக்கிறதா” என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லுத்ராவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு வழக்கறிஞர் லுத்ரா சங்கர் ‘யுனிக் ஸ்பெசிமன்'(தனித்துவமான ஆள்) என்றும் ''அவர் நீதிபதிகளை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்'' என்றும் அவர் பேசிய சில பேச்சுகளை படித்தும் காண்பிக்க, நீதிபதிகள் ‘’சங்கர் டிப்ரஷனில் பேசியிருக்கலாம்'’ என்று குறிப்பிட்டார்கள்.
சங்கரின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே ‘’ஜாமீனில் வெளிவந்தால் மீண்டும் தங்களுக்கு(அரசுக்கு - அதிகாரிகளுக்கு) எதிராகப் பேசுவார் என்பதால்தான் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்துவைத்திருக்கிறார்கள்'’ என்று வாதிட்டார். ‘’சங்கர் மீதான இரண்டு வழக்குகளில் நீதிபதிகள் ரிமாண்ட் கூட செய்யவில்லை. அவரைத்தடுப்புக் காவலில் வைக்க எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை’’ என்று வாதிட்டர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் சங்கர் தொடர்பான வழக்கை விசாரிக்கும்வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக தீர்ப்பளித்தனர். இதனால் தடுப்புக் காவல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தாலும் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டிருப்பதால் அவரால் தற்போது சிறையில் இருந்து வெளியே வரமுடியாது!