US elections 2024 : ‘’ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகவேண்டும்'’ - ஜார்ஜ் குளூனி
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர். அவரை வீழ்த்தவேண்டும் என்றுதான் நாடே ஒன்றுபட்டு 2020 தேர்தலில் பைடனுக்கு வாக்களித்தது. ஆனால், தற்போதைய சூழலில் பைடன் மீது பல்வேறு குற்றசாட்டுகள் இருப்பதோடு, மீண்டும் அதிபர் தேர்தலில் மோதும் ட்ரம்ப்பை வீழ்த்த அவரிடம் வல்லமை இல்லை என்றும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டும் கட்சி வேட்பாளர்களும் முன்னணி பத்திரிகையாளர் முன்பாக நேரடி விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். மூன்று முறை நடக்கும் இந்த நிகழ்வின் முதல் விவாவதம் கடந்த ஜூன் 27-ம் தேதி நடைபெற்றது. அந்த விவாதத்தில் ட்ரம்ப்பின் கரங்களே ஓங்கியிருந்தன. அதனால் பைடனுக்கான எதிர்ப்புக் குரல் இன்னும் அதிகமாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பதில் இருந்து விலகச்சொல்லி அவரது கட்சியின் முன்னணி தலைவர்களே எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் நிதியைத் திரட்டித்தருபவரும், ஹாலிவுட் நடிகருமான ஜார்ஜ் குளூனி பைடன் போட்டியில் இருந்து விலகவேண்டும் என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ''ஜோ பைடன் பல தேர்தல்களில் வெற்றிகண்டிருக்கலாம். ஆனால், காலத்துக்கு எதிராக வெல்வது என்பது மிகவும் கடினம். இப்போதைய காலச்சூழலில் பைடன் தேர்தலில் இருந்து ஒதுங்குவதே நல்லது. மூன்று வாரங்களுக்கு முன்னர் நிதி திரட்டும் நிகழ்வில் ஜோ பைடனை நான் சந்தித்தேன். 2010-ல் நான் பார்த்த பைடன் அல்ல, 2020-ல் நான் பார்த்த பைடனாகக் கூட அவர் இல்லை’’ என்று பேசியிருக்கிறார் ஜார்ஜ் குளூனி.
முன்னாள் சபாநாயகர் உள்பட ஜனநாயகக் கட்சியின் பல்வேறு மூத்த உறுப்பினர்களும் பைடனுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பிவருகிறார்கள். ஆனால், பைடனோ ‘’நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்'’ என அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.
இன்னும் இரண்டு வாரத்துக்குள் எதிர்ப்பை சமாளித்து பைடன் களம் காண்பாரா அல்லது ஒதுங்கிவிடுவாரா என்பது தெரிந்துவிடும்!