கள்ளச்சாராய மரணத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் - விஜய் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குத் தமிழ்நாடு அரசின் அலட்சியமே காரணம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு அரசைக் குற்றம்சாட்டி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அறிக்கை அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.