ஹத்ராஸ் : போலே பாபா சாமியார் தலைமறைவு… ஆனால் FIR அறிக்கையில் சாமியார் பெயரை சேர்க்காத போலீஸ்!
121 பேர் இதுவரை பலியாகக் காரணமாக இருந்த சம்பவத்துக்கான முதல் தகவல் அறிக்கையை உத்தரப் பிரதேச போலீஸ் இன்று பதிவு செய்திருக்கிறது. இதில் கூட்டத்தை நடத்திய சாமியார் ஹரி நாராயண் சாகர் என்கிற சாகர் விஷ்வா ஹரி போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. நிகழ்ச்சிக்கான அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை மட்டுமே போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருக்கிறது.
‘’கூட்டத்துக்கு 80,000 பேர் வரை வருவார்கள் என அனுமதி கேட்கப்பட்டு, அதற்கு ஏற்றபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்ட அரங்கில் கூடிவிட்டார்கள். உணவு நேரமான 2 மணிக்கே கூட்டம் முடிந்து போலே பாபாவும், அவரது மனைவி உள்ளிட்ட முக்கிய சாமியார்கள் வெளியேறிவிட்டார்கள். அவர்கள் வெளியேறியதும் அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் ஓட, கூட்டத்தில் கீழே உட்கார்ந்திருந்தவர்கள் மிதிபட விபத்து நேர ஆரம்பித்தது. ஓடும் மக்களை கட்டுப்படுத்த கூட்டத்தை நடத்தியவர்கள் குச்சி, கொம்புகளைக்கொண்டு தடுக்க முயற்சிக்க மக்கள் நாலாபக்கமும் ஓட ஆரம்பித்தார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் எனப்பலரும் சிக்கிக்கொள்ள உயிரிழிப்புகள் நிகழ ஆரம்பித்தது.
போலீஸும், அதிகாரிகளும் எவ்வளவோ போராடியும் மக்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ், அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல்லை’’ என முதல் தகவல் அறிக்கையில் போலீஸ் தெரிவித்துள்ளது.