கடன் கொடுத்தவரின் மகனையே கடத்திய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா தற்கொலை...மதுரை சம்பவத்தின் பின்னணி?
மதுரையை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரின் மகன் கடந்த ஜூலை 11-ம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டான். முகமூடி அணிந்த ஒரு கும்பல் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரோடு சிறுவனைக் கடத்தியது. சிறுவனை உயிரோடு திருப்பித்தர வேண்டும் என்றால் 2 கோடி வேண்டும் என மிரட்ட, ராஜலட்சுமி உடனடியாக போலீஸில் புகார் அளிக்க, போலீஸ் தேடுதல் வேட்டையை துரதப்படுத்தியது.
போலீஸுக்கு மைதிலி ராஜலட்சுமி போகமாட்டார் என எதிர்பார்த்த கடத்தல் கும்பல், விவகாரம் போலீஸுக்குப் போனதால் பயந்து சிறுவனையும், ஆட்டோ டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடியது. பின்னர் இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் துணை நடிகராக சினிமா, சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் வழக்கு விசாரணையில் இந்தக் கடத்தலில் முக்கிய நபராக குஜராத் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் குமார் என்பவரின் மனைவி சூர்யாவை போலீஸ் தேட ஆரம்பித்தது.
போலீஸ் தேடுதலுக்குப் பயந்து குஜராத்தில் இருக்கும் கணவரின் வீட்டுக்குப் போய் இருக்கிறார் சூர்யா. கணவர் ரஞ்சித் குமாருக்கும், சூர்யாவுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகள் ரஞ்சித்குமாரோடு குஜராத்தில் இருக்க, சூர்யா கட்ஃந்த எட்டு மாதங்களாக மதுரையில் தங்கியிருக்கிறார். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்றுவருகிறது.
இடம்பெயர்ந்த சூர்யா!
சூர்யாவின் சொந்த ஊரான விளாத்திக்குளத்தைச் சேர்ந்த மகாராஜா என்பவரோடு தொடர்பு இருந்ததால்தான் இந்த விவாகரத்து வழக்கு நடைபெறுவதாகவும், ரஞ்சித் குமாரின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை(ஜூலை 20) வந்த சூர்யாவை ரஞ்சித் குமார் வீட்டினுள் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் அவர் கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தியதாகவும் சொல்லப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சூர்யா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(ஜூலை 21) இறந்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த சூர்யாவும், குஜராத் ஐஏஎஸ் அதிகாரியும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக கணவரைப் பிரிந்த சூர்யா, மகாராஜாவோடு தொடர்பில் இருந்ததாகவும், மைதிலி ராஜலட்சுமியிடம் சூர்யா ஏற்கெனவே கடன் வாங்கியிருந்ததாகவும், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மகாராஜாவின் யோசனையில் சிறுவன் கடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சூர்யா மீதான குற்றச்சாட்டுகள் பொய்?!
ஆனால், சூர்யாவின் தாயார் உமா மகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்திருக்கிறார். ‘’என் மகளின் தற்கொலைக்கு காரணம் மைதிலி ராஜலட்சுமியும், அவரோடு சேர்ந்த இரண்டு பேரும்தான். என் மகளின் சொத்துகளை அபகரித்துக்கொண்டு அவள்மீதே பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்த மன உளைச்சலால்தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டார்'’ என பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார் உமா.
இந்த வழக்கில் இன்னும் பல மர்மங்கள் இருப்பதாகவும் மகாராஜாவை விசாரித்தால்தான் உண்மைகள் தெரியவரும் என்றும் சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள்.