கர்நாடகாவில் கன்னடர்களுக்கே 75 மற்றும் 50 % வேலைவாய்ப்பு… சித்தராமையின் மசோதா சட்டப்படி செல்லுமா?!
கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை இந்த மசோதா நிவர்த்தி செய்கிறது. 1984-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சரோஜினி மகிஷி சமர்ப்பித்த அறிக்கை, கர்நாடகாவில் செயல்படும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் சி மற்றும் டி வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 100% இடஒதுக்கீடு உட்பட 58 பரிந்துரைகளை முன்மொழிந்தது. சமீபத்தில், கன்னட அமைப்புகள் இந்த சரோஜினி மகிஷி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பேரணிகளை நடத்தின. அதன் வெளிப்பாடாகத்தான் இப்போது மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
‘’கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் கன்னட நிலத்தில் வேலைவாய்ப்பினை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம். அவர்களின் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை’’ என்று பேசியுள்ளார் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா.
மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுனங்களுக்கும் இந்த 75 சத்விகித, 50 சதவிகித வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்படும். கன்னடர்களை ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்கப்படும் எனச் சொல்லியிருக்கும் சித்தராமையா மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், எங்கள் அரசு கன்னடர்களுக்கு ஆதரவான அரசு என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஐடி மற்றும் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் துறையைத் தவிர்த்து அனைத்து தனியார் தொழில்களிலும் உள்ளூர் மக்களுக்கு 100% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. ''சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் மற்றும் பொது வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்யும் சட்டப்பிரிவு 14 மற்றும் 16-ன் கீழ் இது அரசியலமைப்பிற்கு எதிரானது'' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், இந்த மசோதா வியாழக்கிழமை (நாளை) கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மசோதாவும் நீதிமன்றத்தால் தடை செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.