‘’டிரம்ப்பின் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது உண்மை!’’ - சீக்ரெட் சர்வீஸ் தலைவர் கிம்பெர்லி
அமெரிக்காவின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்கும் அமைப்புக்கு சீக்ரெட் சர்வீஸ் எனப்பெயர். இதன் தலைவராக கிம்பெர்லி சீட்டில் என்பவர் கடந்த 2022 முதல் பதவி வகித்துவருகிறார். ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும்போது, துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடனின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் சீட்டில். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீட்டில் அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கும் கிம்பெர்லி ’’டிரம்ப் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டியது நாங்கள்தான். சீக்ரெட் சர்வீஸ் அமைப்பின் தலைவர் என்கிற முறையில் பாதுகாப்பு குறைப்பாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால், அதற்காக நான் ராஜினாமா செய்யவேண்டும் எனச்சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் பதவி விலகமாட்டேன்'’ எனப் பேட்டியளித்திருக்கிறார்.
மேலும் அவர் ‘’டிரம்ப் உரையாற்றிய இடத்தின் உள்பகுதியை மட்டும்தான் நாங்கள் பார்த்துக்கொண்டோம்… வெளிப்புறப் பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை உள்ளூர் போலீஸ்தான் பார்த்துக்கொண்டார்கள்’’ என்று சொல்ல, இதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உள்ளூர் போலீஸ் மீது பழிபோடுகிறது சீக்ரெட் சர்வீஸ் என விமர்சனங்கள் கிளம்ப, அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அமைப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதில் ‘’உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல் எங்களால் பணியாற்றமுடியாது. உள்ளூர் அதிகாரிகள்தான் உடனடியாக டிரம்ப்பை சுட்டவனை நோக்கி தங்களின் உயிரைப் பணயம் வைத்து நெருங்கியவர்கள். சீக்ரெட் சர்வீஸ் உள்ளூர் அதிகாரிகள் மீது பழிபோடுவதாக பரவும் செய்திகளை நம்பவேண்டாம்'’ என செய்தி வெளியிட்டிருக்கிறது.