ஸ்டெர்லைட் : ‘’ஒரு தொழிலதிபருக்காக மக்களை புழு பூச்சிகளைப் போல நசுக்கியுள்ளனர்’’ - உயர்நீதி மன்றம்!
கடந்த அதிமுக ஆட்சியின்போது 2018-ல் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன். வழக்கில் அவர் ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 100-வது நாளில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாகத் தெரிகிறது''' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
"துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கெல்லாம் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது என்பது குறித்து போலீஸார் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அந்த சம்பவம் நடந்த போது அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சிபிஐ-யின் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை" என உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார் ஹென்றி திபேன்.
இந்த வாதத்தை முழுமையாகக் கேட்ட நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் சிபிஐ-க்கு எதிராகவும், அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் பல கடுமையானக் கேள்விகளை முன்வைத்தனர்.
"துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சிபிஐ-யால் விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. இது சிபிஐ-யின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபிஐ துணை போவதாகவே நீதிமன்றம் கருதுகிறது. பொது மக்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கியுள்ளனர். இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூட சிபிஐ விசாரிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரம் உள்ள வீட்டில் எப்படி ஒருவர் பலியாகியிருக்க முடியும்? இதையெல்லாம் சிபிஐ ஏன் விசாரணைக்கு கொண்டு வரவில்லை" என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.சீனிவாசன், "சிபிஐ தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை மதுரை சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. மறு விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி சிபிஐ மீது குற்றம் சாட்ட முடியும்?" என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், விசாரணை முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள்?'' என சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தனர். "இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்கள், சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கான சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.