நடிகர் மம்முட்டி எடுத்த ஒற்றை புல்புல் போட்டோ… 3 லட்சத்துக்கு ஏலம் போனது எப்படி?
இந்தியாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி புகைப்படக் கலைஞரும் கூட. 72 வயதான மம்மூட்டி பறவைகளின் படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் அவர் எடுத்திருந்த புகைப்படம் ஏலம் விடப்பட அதை ஒரு தொழிலதிபர் 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
மறைந்த எழுத்தாளரும், பறவை ஆர்வலருமான இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பாக சமீபத்தில் புகைப்பட கண்காட்சி கொச்சியில் நடத்தப்பட்டது. இதில் 61 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன. இதில் நடிகர் மம்மூட்டி எடுத்த புல்புல் பறவையின் படமும் அவரது கையெழுத்தோடு சேர்ந்து இடம்பெற்றிருந்தது.
ஒரு பலா மர இலையின் மீது அமர்ந்திருக்கும் புல்புல் பறவையின் போட்டோ அந்த கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையுமே கவர்ந்திருக்கிறது. அதனால் ஏலத்தில் அதிக விலைக்கு, அதாவது 3 லட்சம் ரூபாய்க்கு அச்சு உள்ளாட்டில் எனும் தொழிலதிபர் ஏலத்தில் எடுத்தார்.
ஹோட்டல் தொழில்நடத்திவரும் அச்சு உள்ளாட்டில் தான் புதிதாக திறக்க இருக்கும் ஹோட்டலில் இந்தப்புகைப்படத்தை வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.