மோடியின் நண்பி… முசோலினியின் ரசிகை… யார் இந்த ஜியார்ஜியா மெலோனி!
இன்று இந்தியாவில் அதிகப்படியாக தேடப்படுபவராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. இத்தாலியாப் பிரதமாரான ஜார்ஜியாவும், மோடியும் செல்ஃபி எடுக்க அதற்கு மெலோடி என தலைப்பிட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட, உடனே மோடியை அழைத்து ‘’ஹலோ ஃபரம் மெலோடி டீம்'’ என செல்ஃபி வீடியோவும் எடுத்து வைரலாகிவிட்டார் மெலோனி. இத்தாலியின் வரலாற்றில் முதல் பெண் பிரதமரான மெலோனியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே!
கட்சி தொடங்கிய பத்தே ஆண்டுகளில் ஆட்சி!
இத்தாலியின் முன்னாள் பிரதமரான சில்வியோ பெர்லோஸ்கோனி அமைச்சரவையில் 2008 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தவர் ஜியார்ஜியா மெலோனி. 31 வயதில் அமைச்சரானதால் இத்தாலியின் இளம் அமைச்சர் என கொண்டாடப்பட்டார். 2011-ல் அமைச்சரவையில் இருந்து விலகியவர், இரண்டு அரசியல் நண்பர்களோடு இணைந்து பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி Brothers of Italy என்கிற கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி பத்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்து பிரதமாராகிவிட்டார் மெலோனி.
தாட்சர் தாக்கம்!
மெலோனி பிறந்து ஒரு வருடத்திலேயே அவர் தந்தையும், தாயும் பிரிந்துவிட தாயால் வளர்க்கப்பட்டவர் மெலோனி. மார்கரேட் தாட்சரை படித்துவளர்ந்தவர், அவரைப்போல அரசியல்வாதியாக வேண்டும் என்கிற கனவுடன் 13 வயதிலேயே அரசியல் கட்சியில் இணைந்துவிட்டார். அதேப்போல் இத்தாலியின் சர்வாதிகாரியாக, பாசிசத்தின் முகமாக இருந்த முசோலினியின் ரசிகையாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் மெலோனி.
விறுவிறு வளர்ச்சி!
2012-ல் கட்சி ஆரம்பித்த மெலோனி 2018 தேர்தலில் போட்டியிட்டார். 4.3 சதவிகித வாக்குகள் கிடைத்தது. இந்த தேர்தலுக்குப்பிறகுதான் இன்னும் கடுமையாக உழைத்தார் மெலோனி. 2022 தேர்தலில் 26 சதவிகித வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாக உயர்ந்தது இவரது பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி. முன்னாள் பிரதமர் பெர்லோஸ்கோனியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியின் பிரதமராக பதவிவகித்துவருகிறார் மெலோனி.
தீவிர வலதுசாரி!
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இத்தாலியில் ஆட்சிக்கு வந்திருக்கும் தீவிர வலதுசாரித்தலைவர் ஜார்ஜியா மெலோனி. கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை, அகதிகளுக்கான குடியுரிமை என இவற்றுக்கெல்லாம் எதிரான கருத்துகளைப் பேசியே ஆட்சிக்கு வந்தவர் என்பதால் ஆண் - பெண் இணைந்த குடும்ப வாழ்க்கை, நம் நாடு நம் உரிமை, இத்தாலியப் பணம் இத்தாலியார்களுக்கே என முழங்கிவருகிறார் மெலோனி.
உறவும் பிரிவும்!
டிவி நிகழ்சித் தொகுப்பாளரான ஆண்ட்ரியா ஜியாம்புருனோ என்பவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் மெலோனி. இவர்களுக்கு எட்டு வயதில் மகள் இருக்கிறாள். 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்தனர். இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை. டிவி நிகழ்ச்சியில் ஜியாம்புருனோ பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொள்ள அது செய்தியானது. அப்போது ‘’ஜியாம்புருனோவை நான் ஆதரிக்கவில்லை. அவருடன் எனக்கு ஏற்கெனவே நல்ல உறவு இல்லை. எங்களின் பிரிவை வெளிப்படையாக அறிவிக்கிறேன்'’ என சோஷியல் மீடியாக்கள் மூலம் அறிவித்தார் மெலோனி. மகளைத் தன்னுடன் வளர்த்துவருகிறார் மெலோனி. குடும்ப உறவை ஆதரிக்கும், கிறிஸ்தவ கோட்பாடுகளை அறிவுறுத்தும் மெலோனி திருமணம் செய்யாமலே தாயானது இன்றுவரை அவர்மீதான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.
மோடியுடன் நட்பு!
இன்னொரு வலதுசாரித் தலைவராக மோடியின் கொள்கைளில் ஈர்க்கப்பட்டிருக்கிறார் மெலோனி. மோடியுடன் செல்ஃபி எடுத்து மெலோடி என ஹேஷ்டாக் போடுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு துபாயில் நடந்த சர்வதேச மாநாட்டின்போதும் செல்ஃபி எடுத்துவைரலானவர்தான் மெலோனி.