‘’தமிழகம் முழுக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவேண்டும்'’கள்ளக்குறிச்சி சம்பவம் - பா.இரஞ்சித் கண்டனம்!
நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பலர் அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா.இரஞ்சித் தனது வன்மையான கண்டங்களை அரசுக்கும் காவல்துறைக்கும் தெரவித்துள்ளார்.
"கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணம். அதற்கு வன்மையான கண்டனங்கள்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!" என்று தன் கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் பா.இரஞ்சித்.