தமிழ்நாட்டை விட்டு போறோம்... பரந்தூர் விமானநிலைய போராட்ட மக்கள் அதிரடி!
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் 13 கிராமங்களில் இருந்து நிலத்தை எடுத்து விமானத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி மத்திய அரசுக்கு ஒப்படைக்க வேண்டும். நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி கிராம மக்கள் 700 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்களை அழிப்பதுடன் சூழலியல் முக்கியத்துவம் கொண்ட ஈர நிலங்களையும் விமானநிலையம் அமைப்பதால் அழிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த பகுதியில் விமானநிலையம் அமைக்கக் கூடாது என்று பொது மக்கள் தரப்பிலும், இயற்கை சூழலியல் நிபுணர்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.
ஆனால் போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதை திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாஜக கொண்டு வரும் அழிவு திட்டங்களை தமிழ்நாடு அரசு ஆதரிப்பதை விட்டுவிட்டு, மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில் தங்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால் மாநிலத்தை விட்டே வெளியேறப் போவதாக பரந்தூர் விமானநிலை எதிர்ப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ முடியாத சூழலில் ஆந்திராவில் அடைக்கலம் கேட்க உள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், 24ம் தேதி காலை 9.30க்கு ஆந்திரா நோக்கி புறப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 24ம் தேதி நடைபெற உள்ள ஆந்திராவை நோக்கி கண்ணீர் பயணத்திற்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
700 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் குடியேறப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இவர்களை வெளியேற அனுமதிக்கப் போகிறதா அல்லது மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ஏற்படுத்தியுள்ளது.