புனே பாரில் போதை மருந்து எடுத்துக்கொண்ட சிறுவர்கள் - 2 போலீசார் சஸ்பெண்ட்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுவர்கள் போதை மருந்தை எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, மதுபான பார்-க்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு மதுபான பாரின் கழிவறையில் சிறுவர்கள் போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஊடகவியலாளர் ஒருவர் கழிப்பறைக்கு மேல் மொபைல் போன்மூலம் இந்த காட்சியை படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். புனே நகாின் பெர்குசன் கல்லூரி சாலைக்கு அருகில் செயல்பட்ட Liquid Leisure Lounge (L3) என்ற பார் அது என்று கூறப்பட்டது.
வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து விசாரணை நடத்த புனே நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனே நகரில் உள்ள பார்களில் எல்லாம் போலீசார் சோதனை செய்தனர். சிறுவனர்கள் போதை மருந்து எடுத்துக்கொண்ட பாருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், போதை விற்பனையைத் தடுக்கத் தவறியதாக கூறி இரண்டு காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புனே நகரில் இரவு 1.30 வரை பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டாயம் பார்கள் செயல்படக் கூடாது. ஆனால் வி3 பார், பின்பக்க கதவு வழியாக சிறுவர்கள், இளைஞர்களை நுழையவிட்டு விடிய விடிய பார்ட்டி செய்ய அனுமதித்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து இந்த போதை பார்ட்டியை நடத்திய பாரின் உரிமையாளர் சந்தோஷ் காம்தே, ஃபிரான்சைஸர் ரவி மகேஷ்வரி, மேலாளர் மனாஸ் மாலிக் மற்றும் பணியாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவர்கள் போதை மருந்து எடுத்துக்கொண்ட வீடியோ மகாராஷ்டிரா அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆளும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். மகாராஷ்டிரா முதல்வரோ, இது மிகவும் தீவிரமான பிரச்னை, போதை இல்லா புனே நகரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்!