கர்ப்பிணிகளை பாதிக்கும் ஜிகா வைரஸ் பரவல்... எச்சரிக்கும் அரசு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 8 பேருக்கும் கேரளாவில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளைக் குறிப்பாக வயிற்றில் உள்ள சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிகா வைரஸ் கிருமியானது டெங்குவை பரப்பும் அதே ஏடிஸ் கொசுக்கள் மூலமாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும். இந்த வைரஸ் தொற்று பரவியதும் வேகமாக வளரும். இதன் காரணமாக இதன் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக தொற்று உள்ள கொசு கடித்தவர்களுக்கு 2 முதல் 7 நாட்களில் ஜிகா வைரஸ் அறிகுறிகள் வெளிப்படும்.
இந்த தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல் வரும், சருமத்தில் அரிப்பு, புள்ளிகள் தோன்றும். மூட்டு வலி, கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரியவர்களுக்கு பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கர்ப்பிணிகளுக்கு அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியை இந்த வைரஸ் தாக்கி தடுக்கும். இதன் காரணமாக பிறக்கும் குழந்தைக்கு பல்வேறு பிறவிக் குறைபாடுகள் ஏற்படும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்குக் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் மட்டுமே பரவும் என்பதால் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே வழி. கொசு கடிப்பதைத் தடுக்க வீட்டில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம். கொசு கடிக்காமல் இருக்க முழு உடலை மறைக்கும் வகையில் முழு கால் சட்டை, முழு கைச் சட்டை அணியலாம். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கலாம்.
பொதுவாக ஜிகா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே, இதற்கு பெரிய அளவில் சிகிச்சைகள் இல்லை. ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் போதுமான ஓய்வு, ஆரோக்கியமான உணவு, அதிக அளவில் நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி அலோசனை பெற்று காய்ச்சலைத் தடுக்க பாராசிட்டமால் மாத்திரை எடுக்கலாம். அவர் பரிந்துரைத்தால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். பாதிப்பு தீவிரமானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது நல்லது.