ஆர்ம்ஸ்ட்ராங் கொலை : ரவுடி ‘ஆற்காடு’ சுரேஷின் கூட்டாளிகள் அண்ணாநகர் காவல்நிலையத்தில் சரண்டர்!
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் எட்டு பேர் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களில் முக்கியமானவர் கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் வைத்துக் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு.
வடசென்னை புளியந்தோப்பு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ‘ஆற்காடு' சுரேஷுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் தென்னரசு மற்றும் பாம் சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இதில் ஆற்காடு சுரேஷ், பாம் சரவணின் சகோதரரான தென்னரசுவை கொல்ல, அதற்கு பழிக்குப்பழி வாங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாம் சரவணன் ஆட்களால் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். இந்தக் கொலையின்போது உயிர்தப்பியவரும், இந்தக்கொலைக்கு சாட்சியுமான ஆற்காடு சுரேஷின் நண்பர் மாதவனும் கடந்த ஜனவரி மாதம் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைகளுக்குப் பழிவாங்க ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டரா, ஆற்காடு சுரேஷ் தரப்புக்கும், பாம் சரவணன் தரப்புக்குமான பிரச்சனையில் ஆர்ம்ஸ்ட்ராங் எப்படி உள்ளேவந்தார் என்பது குறித்த போலீஸ் விசாரணை தற்போது நடந்துவருகிறது.