ஒரே ஒரு முறை ஆதரவு தாங்க... அதிமுக - தேமுதிக-விடம் கெஞ்சிய சீமான்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக, பாமக-வுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தனித்து களம் காண்பதாகக் கூறி வரும் சீமான், இந்த இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுக மற்றும் தேமுதிக பொது எதிரியான திமுக-வை வீழ்த்த நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.
விக்கிரவாண்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், "நான் கட்சி ஆரம்பித்து, ஆரம்பிப்பதற்கு முன்பு அதிமுக-வை ஆதரித்து 2009 தேர்தலில் இரட்டை இலைக்கு, அம்மா ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். என் இனத்தை கொன்றுகொண்டிருந்த போது, கொன்ற காங்கிரஸ் - திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்தேன்.
அதற்குப் பிறகு 2011ல் நான் உங்கள் கூட்டணியை ஆதரித்து வேலைச் செய்தேன். அதன் பிறகு 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு ரூபாய் காசு கூட நீங்கள் எனக்குத் தரவும் இல்லை, நான் வாங்கவும் இல்லை. உண்டியல் குலுக்கித்தான் வேலை செய்தேன். அந்த மகன் இன்று நிற்கிறேன். இது ஒரு சூழல்.
பொது எதிரி நமக்கு தி.மு.க. அவர்களை வீழ்த்த இருக்கின்ற வாய்ப்பு. ஒரே வாய்ப்பு. அதே போல் விஜயகாந்த் - ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது அவர்கள் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தேன். விஜயகாந்த் தொகுதிக்கும் சென்று நான் வேலை செய்தேன். இந்த நாட்டில் நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்றால், திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது. நல்ல ஆட்சி மலராது. அதற்கு எளிய பிள்ளைகளான எங்களை ஆதரித்து எங்களுக்குத் துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள். 2026ல் என்ன நடக்கிறது என்பதை பிறகு பாரத்துக்கொள்ளாம்.
ஒரு தடவை, ஒரே ஒரு தடவை எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நான் உங்களுக்காக நின்றிருக்கிறேன். இதை யாரும் மறுக்க முடியாது. இப்போது நீங்கள் நிற்கவில்லை எனவே, இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்து அபிநயாவை வெற்றிபெற செய்ய வேண்டும்" என்றார்.