விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல்... திரள் நிதி கேட்கும் சீமான்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவாவும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க-வில் இருந்து சி.அன்புமணி என்பவரும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் தேர்தல் செலவை சமாளிக்க மக்கள் திரள் நிதி அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்தேசிய இனத்தின் உரிமை, தமிழ் தேசிய இனத்தின் மீட்சி, எழுச்சி, அதன் எதிர்கால பாதுகாப்பான நல்வாழ்வு என்கிற பெருங்கனவோடு 14 ஆண்டுகளாக இந்த களத்திலேயே அரசியல் பெரும்படையைக் கட்டி எழுப்பி வருகிற நாம் தமிழர் கட்சியினர், தொடர்ச்சியாக எந்த தேர்தல் வந்தாலும் அதிலிருந்து விலகி வெளியே நிற்காமல் களத்தில் நின்று தொடர்ந்த மக்களை சந்தித்து முன்னேறி வருகிறோம். இம்முறை எதிர்பாராத விதமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உருவாகிவிட்டது. அந்த நிலையில் மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.
என்னை நன்கு அறிந்த என் இனச் சொந்தங்கள், எங்களுக்கு இல்லாத ஒன்று ஊடக ஆதரவு மற்றும் பொருளாதார வலிமையும்தான். பொருளாதார வலிமை இருந்தால் நாம் ஊடக ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், பொருளாதார வலிமை இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு, கஷ்டங்களுக்கு நாங்கள் ஆளாகிறோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் 50 கோடி, 60 கோடி முதலீடு செய்து களத்தில் நிற்கும் போது நாங்கள் 5 லட்ச ரூபாய் செலவு செய்வதற்கே பெரிய போராட்டமாகிவிட்டது. இம்முறை விக்கிரவாண்டியில் ஆளுகிற கட்சிகள் எல்லாம் எல்லா அமைச்சர்களும், எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர் எல்லோரும் ஒன்று கூடி வேலை செய்வார்கள். பலகோடிகளைக் கொட்டுவார்கள்... இதை நீங்கள் அறிந்ததுதான். வாக்குக்கு பல ஆயிரங்களை விலையாகக் கொடுத்துப் பெறுவார்கள்.
இந்த கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒரு பெருங் கனவோடு களத்தில் நிற்கும் எங்களுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது ஒவ்வொருவரின் பிறவிக் கடன். நீங்கள் கொடுக்கும் சிறு தொகை எங்களை வலிமைப்படுத்தும். மக்களை நம்பி மக்களுக்காகவே நிற்கிறோம். உங்களால் இயன்றதைக் கொடுத்து எங்களை வலிமைப் படுத்துங்கள். பொருளாதார சிரமம் இல்லாது களத்தில் பணியாற்ற எங்களுக்கு உதவுங்கள்.
இடம் எடுத்து தங்கிக்கொள்ள, பசிக்கு உணவு உட்கொள்ள, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத்தான் இந்த பணம்... நாம் வாக்குக்கு பணம் கொடுப்பதற்கோ, ஆடம்பர மேடை அமைப்பதற்கோ காசு கொடுத்து கூட்டங்களைக் கூட்டுவதற்கோ அவர்களுக்கு சாப்பாடு, குவாட்டர், பிரியாணி, தலைக்கு 200 இதையெல்லாம் நாம்மிடத்தில் இல்லை.
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலைக் கடந்து அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி, அதன் பிறகு 2026 தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அது இறுதியாட்டம். அதில் வலுவாக ஆட வேண்டும் என்றால் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வலிமையான படை இது என்று காட்ட வேண்டியுள்ளது. எனவே, உலகெங்கும் பரவி வாழும் அன்பு உறவுகள் எல்லோரும் எங்களுக்கு உதவியாக நில்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.