எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் சீமான்… விக்கிரவாண்டி வெற்றிக்கணக்கு போடுகிறதா நாம் தமிழர்?
அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் வன்மையாகக் கண்டித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
‘’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும்’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சீமான்!
தொடர்ந்து சீமான் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசிவருவதால் சீமான் வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியின் அன்பையும், அதிமுகவின் ஆதரவையும் பெற்றுவிடத் துடிக்கிறார் என்கிறார்கள் சீனியர் அதிமுககாரர்கள்.