‘’சந்தித்த சட்டப்போராட்டமும், மனவேதனையும்தான் காரணம்'’ கள்ளக்குறிச்சி ஶ்ரீமதியின் தாய் செல்வி!
யார் இந்த ஶ்ரீமதி?
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி +2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஶ்ரீமதி வழக்கில் உண்மைகள் பலவும் மறைக்கப்பட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் முறையான பதில் இல்லாமலேயே இருக்கிறது.
இந்நிலையில்தான் ஶ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். வேட்பு மனுவுக்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஶ்ரீமதியின் தாயார் செல்வி ‘’என் மகளுக்கு ஏற்பட்ட துயரம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. வெற்றிபெற்றால் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சந்தித்த சட்டப் போராட்டங்களும் கடந்து வந்த மனவேதனையும்தான் தேர்தலில் போட்டியிட என்னைத் தூண்டியது'’ எனச் சொல்லியிருக்கிறார் செல்வி.