கன்வார் யாத்திரை என்றால் என்ன… ஏன் உச்சநீதிமன்றம் ‘பெயர்ப்பலகை’ உத்தரவுக்கு தடை போட்டிருக்கிறது?
கன்வார் யாத்திரை என்றால் என்ன?
கன்வார் யாத்திரை என்பது வருடா வருடம் சிவன் பக்தர்களால் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரைகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் சிவன் பக்தர்கள், பெரும்பாலும் உத்திரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்து, கங்கை நதியில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று, தங்கள் சொந்த ஊர்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு அர்ப்பணிப்பது இந்த யாத்திரையின் வழக்கம். இந்த யாத்திரையின்போது பக்தர்கள் கடுமையான சைவ உணவுமுறையை கடைபிடிக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு கூட சாப்பிடக்கூடாது, அசைவம் சாப்பிட்டவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களை தொடக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
சர்ச்சைக்குரிய போலீஸ் உத்தரவு!
உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில், போலீஸார் பக்தர்கள் 'சுத்த' சைவ உணவு சாப்பிடுவதை உறுதி செய்ய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி உத்தரவு பிறப்பித்ததுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கன்வார் யாத்திரை பாதை வழியில் உணவு கடை வைத்திருப்பவர்களை புதிய சமையல் பாத்திரங்களை பயன்படுத்தச் சொல்லியும், சைவ உணவு மட்டும் வழங்கச் சொல்லியும் உத்தரவிட்டதுதான் சர்ச்சையின் முதல் ஆரம்பப்புள்ளி. அதோடு மட்டும் நிற்காமல் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை வெளியே போர்டில் எழுதவேண்டும் என்கிற உத்தரவுதான் அடுத்தக்கட்ட பெரும்சர்ச்சையாக மாறியது.
இது முஸ்லிம்கள் அல்லது பிற மதங்களை சேர்ந்தவர்களை அடையாளம் காணுவதற்காக வேண்டும் என்று போடப்பட்ட பிரிவினை உத்தரவு என உச்சநீதிமன்றத்தில் என்ஜிஓ அமைப்புகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தடை!
உச்சநீதிமன்றம் போலீஸார் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்திருக்கிறது. கன்வார் யாத்திரை ஆன்மிக பயணமாக இருந்தாலும், மத நல்லிணக்கத்தை பேணுதல் மற்றும் சட்டத்தை மதிப்பதில் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையே கன்வார் யாத்திரை பக்தர்கள் கங்கை தண்ணீர் பிடித்துகொண்டு வர எடுத்துச்செல்லும் பாத்திரங்கள் அதற்கு செய்யப்படும் அலங்காரங்கள் எல்லாமே காலம் காலமாக முஸ்லீம் மக்கள்தான் பெரும்பான்மையாக செய்துவருகிறார்கள். ஆனால், இப்போதுதான் திடீரென இந்து - முஸ்லீம் எனப் பிரித்துப்பேசுகிறார்கள் என சமூகவலைதளங்களில் பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.