மாணவர்களுக்கு 20 லட்சம்…ஆசிரியர்களுக்கு 40 லட்சம் உதவித்தொகை…DOTE அறிவிப்பின் முழு விவரம் என்ன?
தமிழக முதல்வரின் உதவித்தொகை சம்மந்தமாக மாணவர்களிடமிருந்து யோசனைகளை தமிழக அரசு வரவேற்கிறது. சமூக - பொருளாதார நிலைமையை மேம்படுத்த திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை கல்வி இயக்ககம் (DOTE - The Directorate of Technical Education) 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் ஆராய்ச்சி மானிய திட்டத்திற்கான மாணவர்களின் திட்டக் கோரிக்கைகளை வரவேற்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்கள் காப்புரிமை, தயாரிப்பு, தொழில்துறை பயன்பாடாக மாற்றப்பட்டு சமூக-பொருளாதார நிலைகளை மாற்ற பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், பிரச்சனை சார்ந்த தீர்வுகளை வழங்கும் திட்டங்கள் மற்றும் குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, DOTE அறிவிப்பு திட்டக் கோரிக்கைகளின் நோக்கம், அதிகபட்சம் 36 மாதங்களில் அடையக்கூடிய செயல்திட்டங்களாக இருக்க வேண்டும்.
பொறியியல், உயிரியல் அறிவியல் மற்றும் உயிர்தொழில்நுட்பம், வேதியியல் பொறியியல், வேதியியல் அறிவியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல், வானிலை மற்றும் கடல் அறிவியல், மின்சாரம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு என DOTE அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழக அரசின் உயர்கல்வி துறை கீழ் செயல்படும் அரசுப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். மாநிலத்தின் உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கும் ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும்.
மாணவர்கள் வழிநடத்தும் திட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாயும், ஆசிரியர்கள் வழிநடத்தும் திட்டங்களுக்கு 40 லட்சம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும் என DOTE அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.