''உணவோ, நீட்டோ நான் பார்த்துக்கொள்கிறேன்... படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!''- மு.க.ஸ்டாலின்!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் அமைந்துள்ள கீழச்சேரி கிராமத்தில் இன்று நடைபெற்ற விழாவில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுதிட்டத்தை விரிவுபடுத்தி தொடங்கிவைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் கிறிஸ்தவ பள்ளியில் இந்த விழா இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். அருகில் உட்கார்ந்திருந்த மாணவிகளுக்கு உணவை ஊட்டிவிட்டும் அன்பை பகிர்ந்துகொண்டார் முதலமைச்சர்.
இந்தப்புதிய திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது!
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘’மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் முன் நிற்கிறேன். பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகள் பசியை போக்க உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு குழந்தை கூட பள்ளிக்கு பசியுடன் வரக்கூடாது என்று முடிவு எடுத்து திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் காலை உணவு திட்டம் நம்மை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. உணவின் தரத்தில் ஒரு துளிக்கூட குறை இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டின் வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'’ எனப்பேசியிருக்கிறார் ஸ்டாலின்!