உங்களுக்கு எல்லாம் எதற்குத் தேர்தல்... எதற்கு வாக்கு? - கடலூர் மக்களை திட்டிய தங்கர் பச்சான்
கடலூரில் தோல்வி அடைந்த விரக்தியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செல்ல வந்ததாகக் கூறி தொகுதி மக்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் தங்கர் பச்சான்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தொகுதி மக்களுக்கு நன்றி கூறி வருகிறார். அப்படி நன்றி கூறும் போது அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கடலூரில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி தங்கர் பச்சான் பேசுகையில், "காமராஜர், அண்ணா எல்லாம் தோற்கடிக்கப்பட்ட பூமிதான் இது. அதன் பிறகு மக்கள் அதற்காக வருந்தினார்கள். இவ்வளவு பெரியவர்களை தோற்கடிச்சிட்டோமே என்று மிகவும் வருந்தினார்கள். இப்போது அது போன்று வருந்தக் கூடிய நிலை வரும். தமிழ்நாட்டில் 40க்கு 40 வாக்களித்திருக்கிறார்கள் இல்ல. இன்னும் ஒரு மாசம் கழித்துப் பாருங்கள். கொண்டாட்டம் எல்லாம் ஒரு நாளைக்குத்தான்.
போன முறை நீங்க தேர்ந்தெடுத்து அனுப்பின 38 பேரும் ஒன்றும் செய்து கிழிக்கவில்லை. இப்போது 40 பேரை தேர்ந்தெடுத்திருக்கிங்க... இது இந்த தமிழ்நாட்டை எங்க கொண்டு போய் விடும். ஏற்கனவே ஐந்து வருஷமா எந்த திட்டத்தையும் மத்திய அரசால் செயல்படுத்த முடியலை. மத்திய அரசு செயல்படுத்த மாட்டேங்குது. ஏன்னா முரண்டு புடிச்சிட்டு இருக்கிறார்கள். இப்போது என்ன நடக்கப் போகிறது பாருங்கள். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்... வெளிநடப்பு நடக்கும். அதுக்காகத்தான் நீங்க எல்லாரையும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள்.
தேர்தல் என்பது விளையாட்டா இருக்கிறது உங்களுக்கு. சும்மா நல்ல உடை உடுத்திக்கொண்டு, மேக்அப் போட்டுக்கொண்டு உள்ளே போய் விரலில் மையை பூசிக்கொண்டு வந்து டிவி-யை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பதா தேர்தல். அதுக்கு அப்புறம் தேர்தல் கொண்டாடட்ம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. ஒரு நாள் கொண்டாடினீர்கள், அப்புறம் அவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கிறார்கள்... நீங்கள் உங்கள் வேலையை பார்க்கின்றீர்கள். இதற்கு எதற்கு உங்களுக்கு வாக்கு, எதற்குத் தேர்தல்?
நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது. அந்த பிள்ளைகளின் படிப்புக்காக, மருத்துவச் செலவுக்காக ஏதோ ஒரு சேமிப்புக்காகக் கஷ்டப்படுகின்றீர்கள். எல்லாம் நல்ல அரசாங்கம் இருந்தால் இந்த கஷ்டங்களில் பாதி குறைந்து போய்விடும். அதை தேர்ந்தெடுக்க உங்களுக்குத் தெரியவில்லையே இது வரைக்கும்.
எனக்கு இது அவசியமற்ற ஒன்று. இந்த வெயிலில் நான் வந்து உங்களிடம் ஓட்டு கேட்டேன்... மறுபடியும் நன்றி தெரிவிக்கவும் வந்திருக்கிறேன். இதெல்லாம் புரிஞ்சிக்குங்க. இனிமேலாவது மாறுங்கள். எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக இருக்கிறது. 17 எம்.பி-க்களை தேர்ந்தெடுத்தீங்க, ஒரு ஆளையாவது உருப்படியாக தேர்ந்தெடுத்துள்ளார்களா இதுவரைக்கும். இனிமேலாவது உங்கள் கையில் உள்ள வாக்கைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.
என்னை மதித்து, என் மீது நம்பிக்கை வைத்து இவன் நல்லது செய்வான் என்று நினைத்து வாக்களித்தீர்கள் பாருங்கள் அந்த மக்களுக்கு என் அன்பையும் என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார்.
தேர்தல் என்றால் எந்த கட்சி வெற்றி பெறுமோ, எந்த கட்சி ஆட்சி அமைக்குமோ அந்த ஒரே கட்சிக்குத்தான் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பது போல பாஜக கூட்டணி கட்சியினர் பேசி வருகின்றனர். ஆளுங்கட்சி தான் இருக்க வேண்டும் என்றால் எதற்குத் தமிழ்நாட்டில் பாஜக, பாமக-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்க வேண்டும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டும் சேர்ந்தது தான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை இவர்களுக்குப் புரிய வையுங்களேன் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.