ஆர்ம்ஸ்ட்ராங் கொலை : ''பெண் குழந்தையின் முதல் பிறந்தநாளை இப்போதுதான் கொண்டாடினார்'' - திருமாவளவன்
‘’சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறேன்’’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார்.
‘’பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அம்மையாரின் நம்பிக்கைக்கு உரியவர் என்றும் ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர்.. ஏழை பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர் அன்பு சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார் என்பதை நினைவூட்டினார்.
அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்!