இனி ஒரு நிமிடத்தில் பட்டா... ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு அலைச்சல் மிச்சம்... எப்படி?
திமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வரும் வருவாய் துறை மக்களின் நேரடி தொடர்பில் உள்ள அரசுத்துறை. பட்டா என்பது நாம் வாங்கும் சொத்துக்கான சட்டரீதியான உரிமையை பெற்றுவிட்டோம் என்று வருவாய் துறை வழங்கும் ஆவணமாகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும்.
கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் தமிழ்நாடு நிலம் தொடர்பான ஆவணங்களில் பட்டா, சிட்டா என்ற ஒரே ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், ஒரு சொத்தின் உரிமையை நிலைநாட்டும் முதல் ஆவணம் பட்டாதான். அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் ஒவ்வொருவரிடமும் பட்டா கையில் இருக்கவேண்டும்.
முன்பெல்லாம் பட்டாவுக்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தால் அலுவலக நடைமுறைகள் காரணமாக அந்த விண்ணப்பம் பலர் கைகளுக்கு சுற்றி சுற்றி சென்று பட்டா கிடைக்க பல நாட்கள் ஆகும். ஆனால் இப்போது மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்கும் வகையிலான முறையை கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது.
இனி பட்டாவுக்காக விண்ணப்பிக்க வேண்டிய தேவையே இல்லை. சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்ட உடன் அடுத்த நிமிடத்தில் பட்டாவும் தானாகவே பதிவாகி நில உரிமையாளர் கையில் கிடைத்துவிடும். இது வருவாய்த்துறை சாதனையில் ஒரு புதிய மைல் கல். விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விடும். சில ஊர்களில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
சொத்து வைத்து இருப்பவர்கள் ஏற்கனவே பட்டாவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், முதலில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், உட்பிரிவு இல்லாத பட்டாவுக்கு 17 நாட்களிலும் உட்பிரிவு உள்ள பட்டாக்களுக்கு 30 நாட்களிலும் பட்டா வழங்கவேண்டும் என்று அரசு உத்தரவு வர இருக்கிறது. இந்த புதிய நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றினால் எளிய மக்கள் பட்டா பெறுவது சுலபமாகிவிடும்.