துணை சபாநாயகர் பதவி தந்தால் ஆதரிக்கத் தயார்! - காங்கிரஸ் திட்டவட்டம்
இந்திய மக்களவை வரலாற்றில் இதற்கு முன்பு சபாநாயகரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இணைந்து ஒரு மனதாக தேர்வு செய்தன. தற்போது தங்கள் கோரிக்கை ஏற்காததால் மக்களவை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் முதன் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகரை ஒருமனதாகத் தேர்வு செய்ய பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்பின. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்புகொண்டதாகக் கூறப்பட்டது. அப்போது ஓம் பிர்லாவை ஆதரிக்கத் தயார், அதற்கு பதில் துணை சபாநாயகர் பதவியை எதிர் கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று கார்கே கோரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். பேசிவிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜ்நாத் சிங் மீண்டும் அழைக்கவே இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவான கே.சி.வேணுகோபால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கு அளித்தால் மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க இந்த நிமிடம் வரை நாங்கள் தயாராக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவை சுமுகமாக நடக்க எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். நாங்கள் அரசு கொண்டு வரும் சபாநாயகரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு அவர்கள் எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.
சபாநாயகர் ஆளுங்கட்சியில் இருந்தும், துணை சபாநாயகர் எதிர்க்கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த இரண்டு முறையும் துணை சபாநாயகர் பதவி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் தான் துணை சபாநாயகராக இருந்தார். எனவே, இந்த முறையும் துணை சபாநாயகர் பதவியானது எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும்" என்றார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "இந்தியா கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவி அளிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவோம். தேர்தல் இன்றி சபாநாயகர் தேர்ந்தெடுக்க எங்களுடைய ஒரே கோரிக்கை துணை சபாநாயகர் பதவியை அளியுங்கள் என்பதுதான்" என்றார்.