ஜெய்ப்பூர்: வெளிநாட்டு பெண்களுக்கு ரேட் போட்டு ரீல்ஸ் வெளியிட்ட நபர்!
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய (@guru_brand0000) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூரின் அடையாளமாக இருக்கும் அமீர் (Amer) கோட்டைக்கு வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளை காட்டி ரூ.150க்கு இவர் கிடைப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மற்றொரு பெண்ணைப் பார்த்து இவரும் ரூ.150க்கு கிடைப்பார், இவர் ரூ.200க்கு கிடைப்பார். இவர் ரூ.500, இந்த பெண் ரூ.300 என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் பேசும் இந்தி வெளிநாட்டு பெண்களுக்கு புரியவில்லை என்பதால், அவர்கள் காமராவைப் பார்த்து கை அசைக்கின்றனர். தற்போது இந்த வீடியோவை சிலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, இன்ஸ்டாவில் இந்த வீடியோவை பதிவிட்ட நபர் மீது பல்வேறு வழக்குகளை ஜெய்ப்பூர் போலிசார் பதிவு செய்துள்ளனர்.
இந்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதாக ஜெய்ப்பூர் போலீசார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவுகளில், "இந்த வீடியோ கடந்த ஏப்ரலில் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர் தன்னை உள்ளூர் வழிகாட்டி என்று கூறி வெளிநாட்டினரிடம் அறிமுகமாகியுள்ளான். அவர்களை சில கடைகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பொருட்களை வாங்க வைத்துள்ளான். இவனுக்கும் அந்த பகுதியிலிருந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோ எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அப்போது பதிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு எதிராக பெண்களுக்கு எதிராக செயல்படுவது, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்" என்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர்பாக தொடர்ந்து ஆபாசமாகப் பேசி இந்த நபர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளதாக பலரும் ஜெய்ப்பூர் போலீசை டேக் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜெய்ப்பூரின் புகழுக்கு களங்கமாக இந்த நபர் இருப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஜெய்ப்பூர் போலீஸ் தரப்பில் பதில் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.