‘’நீட் தேர்வு மோசடியை ஏன் விஜய் பேசவில்லை’’ - விஜய்யின் முழு பேச்சும், விமர்சகர்களின் கேள்வியும்!
இன்று காலை 10 மணி தொடங்கிய விஜய்யின் கல்வி விருதுவிழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வைர மோதிரம், 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கி அவர்களது குடும்பங்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துவருகிறார் விஜய்.
பரிசளிப்பு நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக மேடையில் விஜய்யின் முழு பேச்சு இங்கே!
‘’உங்கள்ல சிலபேருக்கு கன்ஃபியூஷன் இருக்கலாம். என்ன படிக்கலாம், என்ன கோர்ஸ் தேர்ந்தெடுக்கலாம்னு.. நீங்க எதைத் தேர்ந்தெடுக்குறீங்களோ அதுல 100 சதவிகிதம் கொடுத்து படிச்சீங்கன்னா வெற்றி நிச்சயம். உங்களுக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுங்க… என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கோ அதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க… கரியர் கைடன்ஸ் பண்றவங்க நிறையப்பேர் இருக்காங்க… நானும் உங்களுக்கெல்லாம் ஒரு கரியர் கைடன்ஸ் சொல்லணும்னு ஆசைப்படுறேன். நாம ஒரு துறையை தேர்ந்தெடுக்கும்போது அதுல எவ்ளோ டிமாண்ட் இருக்குன்னு நாம பார்க்கணும். மருத்துவம், இன்ஜினீயரிங் மட்டும்தான் நல்ல துறைகள் கிடையாது. டாக்டர்ஸ், இன்ஜினீயர்ஸ்னு உலகத்துல நிறையப்பேர் இருக்காங்க… இங்க நம்ம கிட்ட எது இல்லைன்னா, எது தேவைப்படுதுன்னா நல்ல தலைவர்கள். நல்ல தலைவர்கள் இப்போ இல்லை. நான் தலைவர்கள்னு சொல்றது அரசியலுக்கு மட்டும் இல்ல. இப்ப நீங்க ஒரு துறைக்குப் போறீங்கன்னா அதுல சிறந்து விளங்கி தலைமைப்பொறுப்புக்கு, தலைவர்களா வரமுடியும்.
ஃப்யூச்சர்ல அரசியலும் ஒரு கரியர் ஆப்ஷனா ஏன் வரக்கூடாது? அப்படி வரணும்கிறது என்னுடடைய விருப்பம். நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணும். படிக்கும்போதே மறைமுகமா அரசியல்ல ஈடுபடலாம். நியூஸ் பேப்பர்லாம் படிங்க. நியூஸ் பேப்பர்லாம் படிக்கப்படிக்க உங்களுக்கே நிறைய விஷயங்கள் தெரியவரும். ஒரே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரியா எழுதுவாங்க. இன்னொரு பேப்பர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க. ஒரு செய்திய ஒரு பேப்பர்ல ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸ்ல போடுவாங்க. இன்னொரு பேப்பர்ல அது கடைசி பக்கத்துலகூட போடமாட்டாங்க. இங்க செய்தி வேற, ஒப்பீனியன் வேற.
இப்பலாம் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்கு இணையா சோஷியல் மீடியா சேனல்ஸ்லாம் ஒப்பீனியன்ஸ் சொல்றாங்க. ரொம்ப ஈஸியா நல்லத கெட்டதாகவும், கெட்டத நல்லதாகவும், நல்லவங்கள கெட்டவங்க மாதிரியும், கெட்டவங்கள நல்லவங்க மாதிரியும் பொறணி பேசி ப்ரொஜெட் பண்றதையெல்லாம் நாம மீடியா, சோஷியல் மீடியால பார்க்குறோம். நீங்க எல்லாத்தையும் பாருங்க. எல்லாமே படிங்க. அனா, எது உண்மை, எது பொய்னு அனலைஸ் பண்ண கத்துக்கங்க… அப்பதான் இங்க உண்மையாவே நாட்ல என்ன பிரச்சனை, மக்களுக்கு என்ன பிரச்சனை, சமுகத்துல இருக்க தீமைகள்லாம் தெரியவரும். அப்பதான் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்ற பொய்யான பிரசாரங்களை எல்லாம் நம்பமால், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய உலகப்பார்வை வரும். அது வந்துட்டாலே அதுதான் பெரிய அரசியல்.
ஃப்ரெண்ட்ஸ், Friendship adds fragrance to life. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்க. உங்களோட நட்பு வட்டத்துல எதோ தப்பா இருக்குன்னு நீங்க பார்த்தீங்கன்னா முடிஞ்சா அவங்கள நல்வழிப்படுத்தப் பாருங்க. உங்களோட அடையாளத்தை இழந்துடாதீங்க. இப்ப ரீசன்ட் டைம்ல நம்ம தமிழ்நாட்டுல போதைப்பொருட்களோட பயன்பாடு, குறிப்பா யங்ஸ்டர்ஸ் மத்தியில அதிகமாகிடுச்சு. ஒரு பெற்றோர்ன்ற முறையில, ஒரு அரசியல் கட்சியின் தலைவர்ங்கிற முறையில எனக்கே அச்சமாத்தான் இருக்கு. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்கன்னு நான் இங்க பேச வரல… அதுக்கான மேடையும் இது அல்ல… அரசாங்கதைவிட நம்ம சேஃப்ட்டியை நாமதான் பார்த்துக்கணும். செல்ஃப் கண்ட்ரோல், செல்ஃப் டிசிப்ளின் அதை மட்டும் வளர்த்துங்க… Say No To Temporary pleasures, Say No To Drugs என்கூட சேர்ந்து நீங்க எல்லாரும் உறுதிமொழி எடுக்கணும்னு தாழ்மையோட கேட்டுக்குறேன். இந்த தேர்வில் தேர்ச்சி பெறமுடியாதாதவங்க. டிசப்பாயின்ட் ஆகாதீங்க. சக்ஸஸ் இஸ் நெவர் எண்டிங்…ஃபெயிலியர் இஸ் நெவர் ஃபைனல்’’ என்று பேசிய விஜய் ‘’மூன்றாம் தேதி மீண்டும் நடக்க இருக்கும் பரிசளிப்பு விழாவில் நான் பேசப்போவதில்லை. அட்வைஸ் செய்து போர் அடிக்கவிரும்பவில்லை’’ என்று சொன்னார்.
இதற்கிடையே அரசியல் விமர்சகர்கள் ‘’போதைப்பொருள் ஒழிப்பைப் பற்றி பேசிய விஜய், இன்று மாணவர்கள் அதிகம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையான நீட் தேர்வுகள் குறித்தும், அதில் நடந்த மோசடிகள் குறித்தும் பேசவில்லை… சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசவில்லை என்றால் அவரால் அரசியல் கட்சித் தலைவராக பிரகாசிக்க முடியாது'’ என்கிற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.