ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடியை நேருக்கு நேராக தாக்கிப்பேசிய நிலையில் இன்று பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய ராகுல் காந்தி மணிப்பூர், அக்னிவீர் திட்டம், விவசாயிகள் பிரச்சனை எனப் பல மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்துப் பேசினார். கூடவே பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப்பேசினார். அதனால் இன்று பேசப்போகும் மோடியின் உரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் முழு பேச்சையும் கீழே உள்ள லிங்க்கில் படிக்கலாம்.
நரேந்திர மோடி பேசப்பேச எதிர்க்கட்சியினர் மணிப்பூர் மணிப்பூர் என கோஷமிட்டு வர, மோடி நாங்கள் 2047-க்காக இப்போதே 24/7 நாட்டுக்காக உழைப்பதாகப் பேசிவருகிறார்.
நாட்டுக்கு நம்பிக்கை தந்திருக்கிறோம்!
கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் பல சாதனைகளை செய்திருக்கிறோம். நம்பிக்கையற்ற நிலையில் இருந்து நாட்டை தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்றியது எங்களின் மிக முக்கியமான சாதனை. - மோடி
கொல்லாதே கொல்லாதே...
மோடி பேசப்பேச எதிர்க்கட்சியினர் மணிப்பூர் குறித்து கோஷம் எழுப்பிவருகின்றனர். இதில் திமுக உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ''கொல்லாதே கொல்லாதே மணிப்பூரைக் கொல்லாதே'' என குரல் எழுப்பினர்.
எதிர்கட்சிகளுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!
தொடர்ந்து கோஷம் எழுப்பும் எதிர்கட்சியினரை பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்றுவோம் என சபாநாயகர் எச்சரிக்கை!
ஒரிசாவிலும், ஆந்திராவிலும் மகத்தான வெற்றி!
ஒரிசா, ஆந்திரபிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறோம்.
கேரளாவில் 1 சீட் வெற்றி... தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வாக்குகள்!
இந்தியா முழுக்க புதிய மக்களின் அன்பை பெற்றுவருகிறோம். அதன் வெளிப்பாடுதான் கேரளாவில் ஒரு தொகுதியில் வெற்றியும், தமிழ்நாட்டில் வாக்கு சதவிகித எண்ணிக்கை அதிகரிப்பும்!
காங்கிரஸிடம் பேச எதுவும் இல்லை!
காங்கிரஸ் கட்சி எங்களை தேர்தலில் தோற்கடித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது. அவர்களிடம் பேச எதுவும் இல்லை என்பதால் கோஷம் இடுகிறார்கள்.
13 Vs 11… பூஜ்ஜியப் போட்டி!
''காங்கிரஸ் 2024 தேர்தலில் 13 மாநிலங்களில் ஒரு சீட் கூட வெல்லவில்லை'' என்று மோடி சொல்ல, எதிர்கட்சியினர் ''பாஜக 11 மாநிலங்களில் ஒரு சீட் கூட வெல்லவில்லை'' என கோஷமிட்டனர்.
காங்கிரஸ் கலவரத்தை தூண்டுகிறது!
பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கலவரம் செய்து ஆட்சியைப் பிடிக்கப் பார்ப்பதாக மோடி குற்றச்சாட்டு!
அம்பேத்கரின் அரசியலை அழிக்க நினைத்தார் நேரு!
''அம்பேத்கருக்கு எதிராக சதி செய்து அவரை தேர்தலில் தோற்கடித்தார் நேரு. அவரின் அரசியல் எதிர்காலத்தையே அழிக்க நினைத்தார். தலித் தலைவர் ஜெகஜீவன் ராமுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. செளத்ரி சரண் சிங்கையும் காங்கிரஸ் இப்படித்தான் நடத்தியது'’ என மோடி குற்றச்சாட்டு
பேப்பர் லீக் பிரச்சனை!
பேப்பர் லீக் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் அரசு அணுகிவருகிறது.
மணிப்பூர் பற்றி வாய்திறக்காத பிரதமர்!
பிரதமர் மோடி பேச ஆரம்பித்ததில் இருந்தே எதிர்கட்சியினர் ''மணிப்பூர் மணிப்பூர்... நீதி வேண்டும் நீதி வேண்டும்'' என பேச்சு முடியும் வரை கோஷமிட்டனர். ஆனால், மோடி பேச்சின் இறுதிவரையிலும் மணிப்பூர் பற்றி வாய் திறக்கவே இல்லை!