‘’என்ன சாதியென்றே தெரியாதவர்'’ -இழிவுபடுத்திப் பேசிய அனுராக் தாக்கூர்… பதிலடி கொடுத்த ராகுல் காந்தி!
2024- 25 பட்ஜெட் விவாதத்தில் நேற்று மக்களைவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பேசினார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சாரம்சங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப்பேசிய ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா தயாரித்த போட்டோவைக் காட்டி அவர் அருகில் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட எந்த அதிகாரியும் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இதே பாராளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மசோதா நிறைவேற்றப்படும் என்று பேசினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் பேசும்போது ராகுல் காந்தியை தாக்கிப்பேசினார். ‘’தான் என்ன சாதியென்றே தெரியாதவர் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார். இதே அவையில் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி பிற்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்’’ எனப்பேச, காங்கிரஸ் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
ராகுல் காந்தி தன்னை அவமானப்படுத்திய அனுராக் தாக்கூருக்கு பதில் தரவேண்டும் எனக் கேட்க, கூச்சல் குழப்பம் எழுந்தது. இந்த விவாதித்தின்போது சபாநாயகர் இருக்கையில் முன்னாள் காங்கிரஸ் எம்பியும், தற்போதைய பிஜேபி எம்பியுமான உத்திரப்பிரதேசத்தின் ஜக்தம்பிகா பால் இருந்தார். அவர் அனுராக் தாக்கூர் பேசிமுடித்ததும் ராகுல் காந்தியைப் பேசச்சொல்ல, இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க பின்னர் ராகுல் காந்தியை பேச அனுமதித்தார் ஜக்தம்பிகா பால்.
‘’என்னை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்துங்கள். மகிழ்ச்சியோடு அதை செய்யுங்கள். தினமும் என்னை இழிவுபடுத்துங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்.சாதி வாரிக்கணக்கெடுப்பு மசோதாவை நாங்கள் இதே அவையில் நிறைவேற்றுவோம்’’ என்று பேச மீண்டும் அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்துப்பேச மீண்டும் கூச்சல், குழப்பம் உண்டானது.
மீண்டும் ராகுல் காந்தி பேச எழுந்தவர் ‘’யாரெல்லாம் தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களை எல்லாம் இழிவுபடுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நான் இதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் சாதி வாரிக்கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம்’’ என்றார். மீண்டும் அனுராக் தாக்கூர் பேச, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ‘’ஒருவரின் சாதி என்ன என்று எப்படி அவையில் கேட்கலாம்'’ என அனுராக் தாக்கூரை கேட்க மீண்டும் பிரச்சனை எழுந்தது.