மோடி Vs ராகுல் காந்தி… நாடாளுமன்றத்தில் பனிப்போருக்கு இடையே நடந்த வார்த்தைப்போர்!
புதிய சபாநாயகரை நாடாளுமன்றத்தின் தலைவரான பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் அழைத்துபோய் சபாநாயகர் இருக்கையில் உட்காரவைப்பது என்பது மரபு. அதன்படி குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓம் பிர்லா சபாநாயகராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும் பிரதமர் மோடியும், இன்னொரு திசையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஓம் பிர்லாவின் இருக்கைக்கு வந்தனர். அப்போது ராகுலுக்கு மோடி கைகொடுக்க, ராகுலும் மோடியோடு கைகுலுக்கினார். பின்னர் இருவரும் பிர்லாவை அழைத்துக்கொண்டு வந்து சபாநாயகர் இருக்கையில் உட்காரவைத்தனர். பிர்லாவுடன் கைகுலுக்க பின்னால் நின்றுகொண்டிருந்த ராகுல் காந்தியை அழைத்தார் மோடி. ராகுல் காந்தி பிர்லாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும் புதிய சபாநாயகரை வரவேற்று ஒவ்வொரு காட்சி சார்பிலும் ஒவ்வொருவர் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது முதலில் பேசிய பிரதமர் மோடி ‘’ஒட்டுமொத்த மக்களவையின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களுக்கு வழிகாட்டவேண்டும். சபாநாயகராக உங்கள் பணி புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு புத்துணர்வு அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். முந்தைய மக்களவை உங்கள் தலைமையில் பல புதிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை நிறைவேற்றியது. நாம் இந்த பாராளுமன்றத்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படவைத்தோம்.கடந்தமுறை 97 சதவிகிதம் பாராளுமன்றம் செயலாற்றி சாதனைப்படைத்தது'’ என்று பேசினார்.
மோடிக்கு அடுத்துப்பேச அழைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். ‘’எவ்வளவு நாட்கள் பணியாற்றினோம் என்பதல்ல இங்கே முக்கியம். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெறித்துவிட்டு கூட்டத்தை நடத்துவது என்பது மக்களாட்சிக்கு எதிரான ஒரு யோசனை. எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தைக் காக்கவேண்டும் என எதிர்பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பைக் காக்கும் உங்கள் கடமையை சரியாகச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்'’ என்றார் ராகுல்.
இதனையடுத்து சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பேசும்போது ‘’எந்த ஒரு மக்கள் பிரதிநிதியின் குரலும் நசுக்கப்படாது, வெளியேற்றம் போன்ற நடவடிக்கை மீண்டும் நடைபெறாது என எதிர்பார்க்கிறோம். உங்களின் கட்டுப்பாடு என்பது எதிர்க்கட்சிகளின் மீது மட்டுமே இல்லாமல் ஆளும் கட்சியினர் மீதும் இருக்கவேண்டும்'’ எனக் குறிப்பிட்டார். அகிலேஷ் யாதவின் பேச்சை அவருக்குப்பின்னால், திமுக எம்பி கனிமொழியின் அருகில் உட்கார்ந்திருந்த மனைவி டிம்ப்பிள் யாதவ் கணவரின் பேச்சை ரசித்து சிரித்துக் கேட்டிக்கொண்டிருந்தார்.
திமுகவின் சார்பில் டி.ஆர்.பாலு பேசினார். ‘’பிஜேபி எம்பியாக தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும் சபாநாயகராகப் பொறுப்பேற்ற பின்னர் நீங்கள் தாமரை மலரைப் போல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கவேண்டும்'’ என்று சொன்னார்.
ஆளும்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஓம் பிர்லாவைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்க, இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஓம் பிர்லாவை அறிவுறுத்தும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் பேசினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசும்போது, ‘’உங்கள் பக்கத்தில் செங்கோல் இருக்கிறது. அது அதிகாரத்தின் அடையாளம் அல்ல… யார் பக்கமும் சாயக்கூடாது என்கிற நீதித் தவறாமையின் அடையாளம்’’ எனப்பேசியவர், ‘’புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த அம்பேத்கர், காந்தி, பூலே போன்ற தலைவர்களின் சிலையை உள்ளே வைக்க முயற்சிக்கவேண்டும்'’ என பேசிக்கொண்டிருக்கும்போதே பலமுறைக் குறிக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா பாதியிலேயே திருமாவின் மைக்கை அணைத்தும் விட்டார். இதற்கு திமுக உள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.