பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இன்டர்ன்ஷிப் என்பது மிகவும் நகைப்புக்குரியது. சிறு,குறு, நடுத்தரத் தொழில்களை அழித்துவிட்டு 5 பெரிய நிறுவனங்களில் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் தருவோம் என்று சொல்கிறீர்கள். இந்த திட்டத்தால் 99 சதவிகித இளைஞர்கள் பலனடையமாட்டார்கள்.
ஒட்டுமொத்த பட்ஜெட்டில் வெறுமனே 2.5 சதவிகிதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் மிக மிகக்குறைவு. கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை கேள்வித்தாள்கள் வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், அதுகுறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தைக் கூட இல்லை.
நான் கடந்தமுறை பேசும்போதே அக்னிவீர் திட்டம் குறித்துப்பேசினேன். ஆனால், இந்த பட்ஜெட்டிலும் அக்னிவீர் பென்ஷன் திட்டம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. தேசபக்தர்கள் என சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஏன் அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் தர மறுக்கிறீர்கள்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 73 சதவிகித மக்கள் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர். ஆனால், நிதியமைச்சர் அல்வா கிண்டும் போட்டோவில் அவர் அருகில் இருக்கும் ஒருவர்கூட தலித்தோ, பழங்குடியோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரோ இல்லையே ஏன்? இவர்கள்தான் நம் நாட்டின் பலமே. ஆனால், அவர்களுக்கான முக்கியத்துவநே இல்லை. பட்ஜெட் தயாரித்த 20 பேரில் ஒரு சிறுபான்மையின அதிகாரி, ஒரு பிற்படுத்தப்பட அதிகாரி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்டோவில் இல்லை.
நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி என்கிற இந்த ஆறு நபர்கள் 'சக்கரவியூகத்தை' கட்டுப்படுத்துகிறார்கள் என்று ராகுல் காந்தி சொன்னதும் சபாநாயகர், சபையில் இல்லாதவர்கள் பெயரை சபையில் சொல்லக்கூடாது என்பது விதிமுறை எனச்சொல்ல, அம்பானி அதானியை ஏ1, ஏ2 எனச்சொல்கிறேன் என ராகுல் காந்தி சொல்ல காங்கிரஸ் எம்பிக்கள் மத்தியில் கைதட்டல் எழுந்தது. விமானநிலையங்கள், துறைமுகங்கள், இப்போது ரெயில்வே என எல்லாமே இந்த ஏ1, ஏ2-விடம்தான் இருக்கிறது. இவர்கள்தான் ஏகபோக அதிகாரத்தோடு ஆட்சியை ஆளுகிறார்கள்.
இதே நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்'' என்றார் ராகுல் காந்தி!