‘’கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலை’’ - சீமான் ஆவேசம்
‘’கள்ளச்சராயத்தை தடுக்கத் தவறிய திமுக அரசு வட மாவட்டங்களை சுடுகாடாக மாற்றியுள்ளது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் சீமான். ‘’தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவனை இழந்து தவிக்கும் மனைவி என வாசலில் இறந்தவர்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.
அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய சீமான், ‘’நடந்திருப்பது விபத்தோ, தற்செயலான உயிரிழப்போ அல்ல. இது அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள பச்சைப்படுகொலை. அதற்கு அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெரும் கொடுமை. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அவற்றின் மூலம் இழந்த ஒரே ஒரு உயிரையாவது திமுக அரசால் திருப்பி கொடுக்கமுடியுமா’’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
‘’கடந்த ஆண்டு விழுப்புரம், எ.கே.ஆர் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம் குறித்து திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னவானது? இதுவரை அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்