உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தூக்கியடிக்கப்பட்டது ஏன்..? போலீஸ் பின்னணியும், காரணங்களும்!
தமிழக சிவில் சர்வீஸ் அதிகாரிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நேர்மைக்கும், துணிவுக்கும் புகழ்பெற்ற சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீடியா வெளிச்சம் பெற்று மக்கள் மத்தியில் புகழ்பெறுவார்கள். அந்தவகையில் இறையன்பு ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், திலகவதி ஐபிஎஸ் போல சமீபத்திய காலகட்டத்தில் புகழ்பெற்றவர் அமுதா ஐஏஎஸ்.
1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா சென்னை திருநீர்மலையில் அனுமதியின்றி இயங்கிய கல்குவாரியை சீல் வைக்கப்போனபோது 100-க்கும் மேற்பட்டவர்களால் மீடியா கேமராக்கள் முன்பே மிரட்டப்பட, அதை துணிவுடன் எதிர்கொண்டு வெளியே வந்ததன் மூலம் தமிழகம் முழுக்கப் புகழ்பெற்றார். இந்த சம்பவம் அப்போது சட்டசபை வரை எதிரொளித்தது. அமுதா மிரட்டல்காரர்கள் மத்தியில் இருக்கும்போதே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் ''அமுதாவை சாதாரண பெண் என நினைக்காதீர்கள்… அவர் வீரமுள்ள ஐஏஎஸ் அதிகாரி... தடைகளைத் தாண்டிவந்துவிடுவார்'’ எனப் புகழாரம் சூட்டினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்குத் தொடர்ந்து முக்கிய பொறுப்புகள் வழங்கினார் கருணாநிதி. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலும் அமுதா சிறப்பாகப் பணியாற்றி பெயரெடுக்க, ஜெயலலிதாவாலும் பாராட்டப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய அமுதாவை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் உள்துறை செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின். தமிழக அரசு வரலாற்றில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டது அதுவே முதல்முறை. காரணம் உள்துறை செயலாளர் பொறுப்பு என்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பு, நிர்வாகம், புலனாய்வு, சட்டம் - ஒழுங்கு என அனைத்து முக்கிய பொறுப்புகளையும் உள்ளடக்கிய துறை. மிகவும் சென்சிட்டிவான பதவி என்பதால் முதலமைச்சருக்கு மிக நெருக்கமாகவும், நம்பகமாகவும் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளே இந்தப்பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த 14 மாதங்களாக உள்துறைச் செயலாளர் பதவியில் பணியாற்றிவந்த அமுதா தற்போது தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.
போலீஸ் அதிகாரிகளுடன் மோதல்!
தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததே அமுதா ஐஏஎஸ்-ன் மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள் தலைமைச்செயலகத்துக்கு நெருக்கமானவர்கள்.
முதலில் கடந்த ஆண்டு அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் வழக்கை விசாரித்து அறிக்கை வழங்கவேண்டிய பொறுப்பு அமுதா ஐஏஎஸ்-ஸிடம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இருந்தே தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், அமுதாவுக்கும் ஈகோ யுத்தம் ஆரம்பமானதாகச் சொல்லப்படுகிறது. பல்வீர்சிங்குக்கு எதிராக அமுதா விசாரணை அறிக்கை வழங்கப் பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பல்வீர்சிங்கின் சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் ஐபிஎஸ் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இதற்கு அடுத்ததாக வீரப்பன் என்கவுன்டர் மூலம் புகழ்பெற்ற வெள்ளைத்துரை ஏ.டி.எஸ்.பி பணி ஓய்வுக்கு முந்தைய நாள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் உத்தரவையும் மீறி உள்துறைச்செயலாளரான அமுதா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மீடியாக்களில் பெரிய செய்தியாக இடம்பிடிக்க, முதலைமைச்சரும் அமுதாவைக் கண்டிக்க உடனடியாக வெள்ளத்துரை மீதான சஸ்பென்ஷன் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இது மட்டுமல்லாமல் டிஜிபி சங்கர் ஜிவால், முன்னாள் சென்னை மாநகர கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியவர்களோடு அமுதாவுக்கு சரியான பேச்சுவார்த்தை இல்லாததும், தொடர் மோதல் போக்கு இருந்ததும், ஆம்ஸ்ட்ராங் கொலை, அதனைத்தொடர்ந்து நடந்த திருவேங்கடம் என்கவுன்ட்டர் சம்பவங்களில் அது பகிரங்கமாக வெளிப்பட்டதுமே அமுதா மாற்றப்பட காரணங்கள் எனச்சொல்லப்படுகிறது!